'பிரேமம் 'திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பலரை ஈர்த்தவர் நடிகர் அல்போன்ஸ் புத்திரன். இவர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் , ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ' சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்பம் வெளியான சமயத்தில் அதில் தமிழ்மொழி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என  சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் "சென்னை எக்ஸ்பிரஸ் தமிழ் மொழி மக்களை காயப்படுத்துவது போல உள்ளது. ஹிந்தி படங்களை எடுப்பதால் அங்குள்ள மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு படங்களை எடுக்க கூடாது. ஒரு படம் ஒட்டுமொத்த மக்களுக்கானதாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். எனது பிரேமம் படத்தில் இரண்டு மொழிகளுக்கான மதிப்பையும் நான் கொடுத்திருப்பேன்.இனிமேலாவது இது போன்று படங்களை எடுக்காதீர்கள் அண்ணா"என குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித் ஷெட்டிக்கும் அல்போன்ஸ் புத்திரனுக்கும் இடையில் அப்போது கருத்து மோதல் ஏற்பட்டது.



இந்நிலையில் அப்போது நான்  பேசியது தவறு என அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக் வாயிலாக ரோகித் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்பது போன்ற பதிவு ஒன்றினை ஷேர் செய்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன்  வெளியிட்டுள்ள பதிவில் " சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழை வெளிப்படுத்தியது குறித்து ரோகித் ஷெட்டியிடம் எனக்கு பிரச்சனை இருந்தது. தமிழர்களை காயப்படுத்துவது அவரது நோக்கமாக இருந்திருக்காது. ஏனெனில் அவர் இயக்குநர் ஷங்கர்  சார் படங்களின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்  மூலம் ஈர்க்கப்பட்டு நிறைய காட்சிகளை எடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன். நான் முன்பு தெரிவித்த கருத்துகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் எடுத்த சிங்கம் 2  படத்தில்  ஹீரோ அரசியல் கட்சிகளிடம் பணம் பெறுவது போன்ற ஒரு காட்சியில் நாயகனின் அம்மா கோபப்படும் காட்சியை பார்த்து நான் அழுதுவிட்டேன். நாயகன் தன் தாயிடம் தோற்றுப் போகும் அந்த காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதுவரையில் நான் பார்த்த படங்களில் இப்படியான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை.  இது போன்ற காட்சியை படமாக்கிய உங்களுக்கு என் மரியாதையை உரித்தாக்கிக்கொள்கிறேன். உங்களின் 'கோல்மால்' சீரிஸ், 'சிங்கம்' சிரீஸ், 'சிம்பா' போன்ற பல படங்களை நான் ரசித்துள்ளேன் . உங்களின் அடுத்த படைப்பான 'சூரியவன்ஷி'க்கும் கூட நான் காத்திருக்கிறேன். இந்த தம்பியை மன்னிச்சிடுங்க "
என குறிப்பிட்டுள்ளார்.




என்னதான் மன்னிப்பு கேட்பது போல பதிவிட்டிருந்தாலும் இது ரோஹித் ஷெட்டியை மறைமுகமாக சாடுவது போல் உள்ளது என நெட்டிசன்கள் கிசு கிசுத்து வருகின்றனர். அல்போன்ஸ் புத்திரன் தற்போது  பாட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான பகத் பாசில் மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.