நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியானது. இரு படங்களிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்ற நிலையில் நடப்பாண்டு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகியிருந்தது. அதேசமயம்  தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன், ராஜேஷ் இயக்கும் படம், தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இதில் இறைவன் படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களின் மூலம் அஹமத் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கும் நிலையில்  யுவன்சங்கர் ராஜா  இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது. 



 தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டதால் ஜெயம் ரவி ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி இறைவன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இது முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியிலான கதையை கொண்டது. இதில் போலீஸ் அதிகாரியாக  ஜெயம் ரவி வருகிறார். அவருடன் உடன் பணியாற்றுபவராக நரேன் வருகிறார். தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களின் கொலையும், அதனை செய்யும் ராகுல் போஸூம், இதற்காக போலீஸ் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பதும் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வன்முறை காட்சிகள் நிறைந்த ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கே ஒரு பயம் வருகிறது. நிச்சயம் இப்படம் ரசிகர்களை கவரும் என இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.