தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா முதல் அலையின் போது, தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அண்மையில் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் குறித்து சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். 


சிக்கலில் இருக்கும் இந்தியன் 2 - என்னதான் பிரச்னை


   முன்னதாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பூஜையும் போடப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிற இந்தப்படத்தில் நடிகையாக காஜல் அகர்வாலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.




படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார். இதனிடையே லைகா நிறுவனம் ஷங்கர் தரப்பு படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தப் பிரச்னையை விசாரித்த நீதிமன்றம் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியது. ஆனால் இருதரப்பிற்கும் இடையேயான பிரச்னை தீரவில்லை.  


இதனைத்தொடர்ந்து ஷங்கர் தரப்பு நீதிமன்றத்தில் சில காரணங்களை கூறி எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து ஷங்கரும் ராம் சரண் நடிக்கும் RC 15, அந்தியன் ரிமேக் என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்தப் பிரச்னை இவ்வாறாக சென்று கொண்டே இருந்த நிலையில் படம் வெளியாகுமா? வெளியாகதா என்ற கேள்வி எழுந்தது. 




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் விசாரணைக்கு வந்த இந்தியன் 2 வழக்கில், தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பு இரண்டும் சுமூகமான நிலையை எட்டியதாக தெரிகிறது. மேலும் ஷங்கர் மற்ற படங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு , முதலில் இந்தியன் 2 படத்திர்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தை வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் மறுதுவக்கம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முதற்கட்டமாக, படக்குழு 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ஆனால் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை முடித்த பின்னரே ஷங்கர் இந்தப் படத்தில் கவனம் செலுத்துவார் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.