இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அதிகளவு வசூலை வாரித்தரும் படங்களில் ஆக்‌ஷன் படங்களுக்கு என்று தனி இடம் உண்டு. நாயக அரிதாரத்தை நம்பியே பெரும்பாலான ஆக்ஷன் படங்கள் எடுக்கப்படுகிறது. அந்த படங்களின் திரைக்கதையுடன் சேர்ந்து இசையும், அதில் வரும் குத்து பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.


அந்த வகையில், அந்த காலம் முதல் இந்த காலம் திரைப்படங்களில் ஐட்டம் சாங் எனப்படும் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகைகள் ஆடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் இதற்காகவே சில நடிகைகள் இருந்து வந்தனர். ஆனால், இன்று திரையுலகின் முன்னணி நடிகைகளே இதுபோன்று ஒரு குத்து பாடல்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர். அதற்காக படத்தின் நாயகியை விட அவர்கள் அதிகளவு சம்பளம் பெறுகின்றனர்.


அந்த வகையில், இந்தியாவில் தற்போது இதுபோன்ற குத்து பாடல்களுக்கு மட்டும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார்? என்று காணலாம்.


சமந்தா:


அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் இடம்பெற்ற ம்ம் சொல்றியா.. ம்ம்ஹ்ஹ்ம் சொல்றியா பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பாடல் வெளியான அத்தனை மொழிகளிலும் ஹிட். அந்த பாடலுக்கு பிரபல நடிகை சமந்தா ஆடியிருப்பார். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அந்த பாடலே மிகப்பெரிய பலமாக அமைந்தது. அந்த பாடலுக்காக படத்தின் நாயகியை விட சமந்தா அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. சமந்தா அந்த பாடலுக்காக மட்டும் ரூபாய் 5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.


தமன்னா:


சமந்தாவின் புஷ்பா பட பாடலுக்கு இணையாக இந்திய அளவில் ட்ரெண்டான பாடல் காவாலா பாடல். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடல் ஆகும். படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்த தமன்னா இந்த பாடலுக்கு நடனம் ஆடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். படத்தில் அதிக காட்சிகள் வந்த நடிகர்களை விட தமன்னாவிற்கு இந்த பாடலுக்காக அதிக தொகை ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் ஜெயிலர் படத்திற்காக மட்டும் ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.


கத்ரீனா கைஃப்:


பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை கத்ரீனா கைஃப். இவர் 2012ம் ஆண்டு ஹ்ரித்திக்ரோஷன் – சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சாமெளி பாடலுக்காக கத்ரீனா நடனம் ஆடியிருப்பார். அந்த பாடல் இந்தியில் மிக மிக பிரபலமான பாடலாக அமைந்தது. அந்த பாடலுக்காக அப்போதே அவருக்கு கோடியில் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


கரீனா கபூர்:


பாலிவுட் உலகின் பிரபல நடிகை கரீனா கபூர். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கான் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள இவர் பெவிகால் சே என்ற பாடலுக்காக ரூபாய் 1.5 கோடி சம்பளம் வாங்கினார். 2012ம் ஆண்டு வெளியான தபாங் 2ம் பாகத்தில் கரீனா கபூர் இந்த ஒரு பாடலில் கலக்கியிருப்பார்.


மலைகா அரோரா:


பாலிவுட்டின் பிரபல நடிகையான மலைகா அரோராவும் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஒரு பாடலுக்கு ரூபாய் 50 லட்சம் வரை ஊதியமாக பெறுகிறார்.


தற்போது திரையுலகில் குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அணுகும் நபர்களில் சமந்தா, தமன்னா போன்ற ஹீரோயின்களே முன்னணியில் உள்ளனர். இவர்களின் பட்டியலில் விரைவில் பிரபல ஹீரோயின்களும் இணைவார்கள் என்று கருதப்படுகிறது.