‛பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... குளிர் புன்னகையில் எனை சுட்ட நிலா...’ ஒரு சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டு, ஒரு கல்லூரியின் மேடையில் நின்று கொண்டு, ஒட்டுமொத்த மாணவ கூட்டத்தையும் கட்டுப்படுத்திய பாடல் அல்ல இது. 90களில் காதலுக்காக ஏங்கித் தவித்த, காதலை சொல்ல முடியாமல் ஏங்கித் தவித்த ‛இதயம் முரளிகளின்’ உள்ளக்குமுறல் தான் அந்த பாடல். 


இன்றும் ‛இதயம் முரளி’ என்கிற அடைமொழியோடு சில காதல் ஃபார்முலா நாயகர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அவர்களை பாராட்டுவோரும் உண்டு. பயந்தாங்கோலிகள் என்று சாடுபவர்களும் உண்டு. ஏன் இந்த நிலை இதயம் முரளிகளுக்கு?






தன்னம்பிக்கை இல்லாத மருத்துவ மாணவன் ஒருவன்; சக மாணவி ஒருத்தியை காதலிக்கிறான். அவளுக்காக ஏங்குகிறான். இதற்கிடையில் அந்த மாணவி, தன் தங்கையின் காதலிக்கு உதவிவதை, அவன் அவளின் காதல் என்று தவறாக புரிந்து கொள்கிறான். இதற்கிடையில் தங்கையின் காதலுக்கு தந்தை மறுக்க, தங்கை தற்கொலை செய்து செய்து கொள்கிறாள்.


அதுவரை தன் காதலை சொல்லாமல், சொல்ல தைரியமும் இல்லாமல் சுற்றித்திரிந்த மருத்துவ மாணவன், தன் காதலி யாரையும் காதலிக்கவில்லை என்கிற உண்மை தெரிந்து, அவளிடம் தயங்கி தயங்கி தன் காதலை கூறுகிறான். அதுவும் கல்லூரியின் கடைசி நாளில். தங்கை இறந்த சோகத்தில் இருக்கும் அந்த மாணவி, மாணவன் சொன்ன காதலை காது கொடுத்து கேட்கவில்லை. பின்னர் அதை அவள் தாமதமாக அறிந்து கொள்கிறாள். இந்நிலையில், தன் காதலை சொல்லாமல் பொத்தி வைத்து பொத்தி வைத்து, இதய நோய்க்கு ஆளாகிறான் மாணவன். 


சிகிச்சை முடிந்து ரயிலுக்காக அவன் ஊர் திரும்பும் போது, தன் தந்தை ஒப்புதலோடு, அவனிடம் காதலை சொல்ல வருகிறாள் அந்த மாணவி. அப்போது, அவளை தடுக்கும் மாணவனின் நண்பன், ‛அவனுக்கு சந்தோஷத்தையும் துக்கத்தையும் தாங்கும் சக்தி இப்போது இல்லை’ என்று கூறி தடுத்துவிடுகிறான். அத்தோடு, அங்கிருந்து ரயில் புறப்பட, அதை பார்த்தபடி நிற்கிறாள் காதலி. 






இது தான் இதயம் படத்தின் கதை. 1991 செப்டம்பர் 6 ம் தேதி இதே நாளில் வெளியான இத்திரைப்படத்தை, காதலர் தினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கதிர் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையும், அப்துல் ராஹ்மானின் ஒளிப்பதிவும், இதயத்துடிப்பை நமக்கு உணர வைத்திருக்கும். பிரபல சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இதயம் திரைப்படம், பெரிய அளவில் வசூலையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமல்லாது, இதயம் முரளி என்கிற கதாபாத்திரத்தை வாழ்வியலோடு இணைத்தது. 


முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், துள்ளல், காதல், சோகம், வலி என பல உணர்வுகளோடு பயணித்து, ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த படம். 31 ஆண்டுகளுக்கு முன் இன்று இதே நாளில்  இதயம் வெளியான போது, கல்லூரி மாணவர்கள் தியேட்டர்களில் தவம் இருந்ததை மறக்க முடியாது.