சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என 'டாக்டர்' படத்தின் ராசியான ஜோடி மீண்டும் சேர அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம்தான் 'டான்'. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பளார். திரும்பும் பக்கம் எல்லாம் டான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


கல்லூரிக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தில் நடித்த பெரும் நடிகர் பட்டாளமே பல பேட்டிகள் கொடுத்து வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் பல யூட்யூப் சானல்களில் பேட்டி அளித்திருந்தார். அந்த வகையில் ஒரு வித்தியாச போட்டியாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை விடியோவாக தொகுத்து சிவகார்திகேயனிடம் கொடுத்து பதில் சொல்லப்பட்டு ஒரு வீடியோ வைரலாகி இருந்தது. அதில் தன் மகளுக்கு வழங்கும் அட்வைஸ் குறித்தும், அப்பா குறித்தும் சில உணர்வுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.



அப்பா இப்போ இருந்தா அவருக்கு என்ன வாங்கி கொடுக்க ஆசை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "அப்பாக்கு நல்லா ட்ரெஸ் பண்ணிக்க பிடிக்கும். ஆனா அந்த நேரத்துல அதுக்கான வசதிகள் இல்ல. கொஞ்சம் நல்ல பொசிஷனுக்கு போனதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் வசதி ஆனோம். துணி தச்சு தான் போடுவாங்க, அதனால இப்போ உலகத்துல உள்ள நல்ல துணி எல்லாம் வாங்கி ட்ரெஸ் பண்ண வைக்கணும்ன்னு ஆசை. அப்புறம் கார் மேல ரொம்ப கிரேஸ் அவங்களுக்கு. ஒரு அம்பாசிடர் வச்சிருப்பாங்க, அதுக்கு பார்ட்ஸ் மாத்துறது, ரிப்பர் பண்றது எல்லாம் அவங்களே பண்ணுவாங்க. இப்போ இருந்தா அவங்களுக்கு புடிச்ச கார் வாங்கி தர ஆசை. ஆனா அதையெல்லாம் தாண்டி நான் அப்பா கூட உக்காந்து பேசுனதே இல்ல, நெறைய பேசணும்ன்னு ஆசையா இருக்கு. முடிஞ்சா ஒரு முத்தம் கொடுக்கணும், அவ்ளோதான்." என்று கூறினார். 



உங்கள் மகளுக்கு நீங்கள் தரும் அட்வைஸ் என்ன என்று பெண் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "என் பொண்ணுக்கு நான் சொல்றது என்னன்னா நாம முன்ன எப்படி இருந்தோம், இப்ப எப்படி இருக்கோம் அப்டின்ற அந்த வித்யாசத்த புரிய வைப்பேன். ரொம்ப இல்ல, இப்போ ஒரு சைக்கிள் வாங்கினா, அது எனக்கு எந்த வயசுல கெடச்சுதுன்னு மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன். ரொம்ப நாள் கேட்டுட்டே இருப்போம் வாங்கியே தர மாட்டாங்க அப்டிலாம் சொல்ல மாட்டேன். ரொம்ப பூமர் அங்கிளா மாறாம, கொஞ்சமா அறிவுரை சொல்லுவேன்.", என்றார்.