மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா தான் முதன்முதலில் பதான் பட பாடல் சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில், மத்தியபிரதேச மாநில சபாநாயகர் கிரிஷ் கவுதம் இன்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.


பதான் படம்:


நடிகர் ஷாருக்கான் தன் மகளுடம் பதான் படத்தைப் பார்ப்பாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஷாருக்கானுக்கு சுஹானா கான் என்ற மகள் இருக்கிறார். அவருக்கு 23 வயதாகிறது. இந்நிலையில் ஷாருக்கான் அவருடைய மகளுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சபாநாயகர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.


யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் பதான் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் தற்போது இந்த பாடல் ஒரு சர்ச்சையில் சிக்கி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  


சர்ச்சையின் பின்னணி:


தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன் சிரிப்பால் கட்டிப்போட்ட டஸ்கி அழகி தீபிகா, தொடர்ந்து ’சென்னை எக்ஸ்பிரஸ்’, ’ஹேப்பி நியூ இயர்’ என தன் கரியரின் வெவ்வேறு கட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திய ஷாருக்கானுடன் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.


ரசிகர்களின் ஆதர்ச ஜோடியாக மாறிப்போன ஷாருக் - தீபிகா, தற்போது மீண்டும் ’பதான்’ படத்தில் இணைந்துள்ளனர்.


 






பதான் படத்தில் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சியின் உச்சத்தில் தோற்றமளித்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பதான் படத்தின் இந்த பாடலில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி அமர்க்களமாக இருந்ததை ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் தற்போது மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா இப்பாடல் குறித்து சர்ச்சையை எழுப்பியுள்ளார். அதற்கு காரணம் இந்த பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் பயன்படுத்தப்பட்டதை கண்ட அமைச்சர் கோபமடைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் சில தவறான மன நிலையை ஏற்படுத்த கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் அவை மாற்றப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கின்றன.