பெப்சி நிறுவனத்தின் `மௌண்டேன் டியூ’ குளிர்பானத்தின் புதிய `டர் கே ஆகே ஜீத் ஹே’ என்ற விளம்பப் பிரச்சாரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மௌண்டேன் டியூ தொலைக்காட்சி விளம்பரங்களில் அதன் புதிய விளம்பரத் தூதராக களமிறங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்காக விளம்பரங்களில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. இந்த நிறுவனங்களும் அவரின் புகழுக்கேற்ற தொகையை சம்பளமாக கொடுத்து வருகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் எடுக்கப்பட்ட புதிய மௌண்டேன் டீயூ விளம்பரத்திற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 


சில ஆண்டுகளுக்கு முன்பு, விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் ஷாரூக் கான் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது அந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச சம்பளமாக கருதப்பட்டது. தற்போது அதனைவிட அதிகமாக மவுண்டேன் டியூ விளம்பரத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் மகேஷ் பாபு. 



இந்த விளம்பரத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மேல் நிற்கும் மகேஷ் பாபு, இந்திய மோட்டார் சைக்கிள் சாகச அணி ஒன்றின் பிரதிநிதியாக நிற்பது போலவும், மவுண்டேன் டியூ குடித்துவிட்டு, புர்ஜ் கலீஃபாவின் மேல் இருந்து கீழே வெற்றிகரமாக இறங்குவதாகவும் இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது. 


சினிமாவைப் பொருத்தவரையில், இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வரும் `சர்காரு வாரி பாடா’ என்ற திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.