உலகெங்கிலும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் அனேகரின் விருப்பமான படங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நிச்சயம் தென் கொரியாவிற்கும் முக்கிய இடம் உண்டு. அந்த தென் கொரியாவில் நடைபெறும் மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழா இந்த புஸான் சர்வதேச திரைப்பட விழா. இது தென் கொரியாவின் புஸான் நகரில் ஆண்டுதோறும் செப்டம்பர் (அல்லது) அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வருகிறது. 1996-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த விழா இந்த ஆண்டு 27-வது ஆண்டாக கடந்த அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவானது அக்டோபர் 14-ம் தேதி நிறைவு பெறும். முதல் படமாக ஈரானை சேர்ந்த செண்ட் ஆஃப் விண்ட் (Scent of wind) திரைப்படம் சர்வதேச திரையிடலாக திரையிடப்பட்ட நிலையில் நிறைவு விழா சிறப்பு திரைப்படமாக எ மேன் ( A Man ) எனும் ஜப்பானியத் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவினை தன் கொரிய கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகமும், புஸான் மாநகரக் குழுவும், கொரிய திரைப்பட கவுன்சிலும் இணைந்து நடத்துகின்றன.



புஸான் திரைப்பட விழா போஸ்டர், (Image courtesy www.biff.kr)


புஸான் திரை விழாவின் வரலாறு


1990-களில் தென் கொரியத் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படத்துறையில் மிக அழுத்தமான கவனத்தை பெற்ற காலத்தில், தென் கொரியாவில் 1996-ம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்ட இந்த சர்வதேச திரைப்பட விழாவே தென் கொரியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வதேச திரைப்பட விழாவாகும். முதலில் இது புஸன் ( PUSAN ) சர்வதேச திரைப்பட விழா ( PIFF )எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் புஸான்  (BUSAN )  சர்வதேச திரைப்பட விழா ( BIFF ) என்று பெயர் மாற்றப்பட்டது. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் திரைப்படங்களுக்கு இவ்விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் இளம் இயக்குனர் மற்றும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழாவானது அமைப்பாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையினால் இவ்விழாவானது ஆசியாவின் கேன்ஸ் (Cannes of Asia) என அழைக்கப்படுகிறது.


கோவிட் கட்டுப்பாடுகளால் கடந்த மூன்றாண்டுகளாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த இந்த விழாவானது இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி கோவிட் சூழலுக்கு முன்பான முறையில் அனைவரும் நேரில் பங்கேற்கும் வகையில் நிகழ்கிறது. இந்தாண்டு இவ்விழாவில் 71 நாடுகளை சேர்ந்த 243 திரைப்படங்கள் திரையிடப்படுகிறன. அவற்றில் 89 திரைப்படங்கள் உலக சிறப்பு திரையிடல்களாகும்.


புஸான் திரைப்பட விழாவில் எழுந்த சர்ச்சை


இந்த திரைப்பட விழாவானது ஆசிய மற்றும் உலகத் திரைப்படங்கள் பலவற்றை அதன் தன்மை மாறாது நடைபெற்று வந்தாலும் சில அரசியல் தலையீடுகளால் சர்ச்சைகளும் அவ்வபோது நிகழ்ந்து வந்தன. அதில் குறிப்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற 19-வது புஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட த ட்ரூத் ஷல் நாட் சிங்க் வித் செவொல் (The Truth Shall Not Sink with Sewol) தென் கொரிய டாக்குமென்ட்ரி திரைப்படம் தென் கொரியாவில் நிகழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கிய படகு மற்றும் அதில் உயிரிழந்த 304 நபர்களை பற்றியது. உடனே அரசும் அப்போதைய புஸான் நகர மேயரும் திரைப்படத்தினை மேலும் திரையிடக்கூடாது என வலியுறுத்திய நிலையில், விழா அமைப்பினர் எந்த அழுத்தத்திற்கும் உள்ளாகாமல் திரையிட்டனர். அதன் விளைவாக புஸான் விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்பட்டதோடு, அரசு நிர்வாகத்தினர் பல்வேறு தடைகளை மறைமுகாக ஏற்படுத்தினர். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதோடு விழாக் குழுவின் இயக்குனர் லீ யாங்-க்வான் (Lee Yong-kwan) தொடர் அழுத்தங்களால் 2016-ம் ஆண்டு பதவி விலக நேர்ந்தது. அரசு நிர்வாகத்தின் அழுத்ததினை கண்டிக்கும் விதமாக தென் கொரியாவின் முக்கிய படைப்பாளிகள் பலர் விழாவினை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் புஸான் சர்வதேச திரைப்பட விழா எந்த அழுத்தங்களுமின்றி அதன் கருத்தியல் படியே இன்றும் நடைபெற்று வருகிறது. லீ யாங்-க்வான் மீண்டும் திரைப்பட விழாவின் இயக்குனாராக நியமிக்கப்பட்டார்.


விருதுகள்


இந்த விழாவில் எண்ணற்ற தலைப்புகளின் கீழும், பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு பிரிவான ஓபன் சினிமா எனும் பிரிவில் 4000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திறந்த வெளி திரையரங்க அமைப்பில் தமிழ் திரைப்படமான விக்ரம் திரையிடப்பட்டது. அது அரங்கு நிறைந்த காட்சியாக பல்வேறு பாராட்டுக்களை பெற்றது. விழாவின் நிறைவு நாளில் இங்கு போட்டிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் திரையிடப்படும் திரைப்படங்களில் சிறப்பான திரைப்படங்களுக்கு விருதும் பல்வேறு அங்கீகாரமும் வழங்கப்பட உள்ளன.



யாஷ் சோப்ரா,( Image courtesy yashrajfilms.com)


தி ஆசியன் ஃப்லிம் மேக்கர் ஆஃப் த இயர்( The Asian film maker of the Year)


அவற்றில் முக்கியமாக த ஆசியன் ஃப்லிம் மேக்கர் ஆஃப் த இயர் ( The Asian film maker of the Year) எனும் பெயரில் ஆசிய சினிமாவிற்கு செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, கௌரவ விருதாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இவ்விருதினை இன் த மூட் ஃபார் லவ் (In the Mood for Love), சங்கிங் எக்ஸ்ப்ரஸ் (Chungking Express), லஸ்ட் காஸன்(Lust Caution) போன்ற படங்களில் நடித்த ஹாங்காங்கை சேர்ந்த பிரபல நடிகர் டோனி லியோங் ச்சு வாய் ( Tony Leung Chiu Wai )-க்கு வழங்கப்படுகிறது. இவ்விருதினை பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ரா கடந்த 2009-ம் ஆண்டு பெற்றார் என்பது இந்திய திரையுலகிற்கு சிறப்பாகும். இந்த ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விருதுகளும் விழாவின் சிறப்புகளையும் திரைப்படங்களின் விபரங்களையும் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.