கனவுத் தொழிற்சாலையான சினிமாவில் சில நடிகர்கள் அறிமுகமான முதல் படத்திலேயே அதிகம் பேசப்படுவார்கள். அடுத்தடுத்த படங்களில் தோல்வியை தழுவி தடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள். சில நடிகர்கள் சில ஆண்டுகள் சினிமாவில் ஜொலித்துவிட்டு காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடுவார்கள். சில நடிகர்கள் சூழலுக்கு ஏற்ப துணை கதாப்பாத்திரமாக மாறிவிடுவார்கள்.


சிலர் மட்டுமே காலத்தால் மாற்ற முடியாத கதாநாயகர்களாக மிளிர்வார்கள். அதில் ஒருவர் தான் ஜோதிகா. இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஜோதிகா. சில நாட்களுக்கு முன் ஜோதிகா முதன்மை கதாபாத்திரமாக நடித்த உடன்பிறப்பே படம் வெளியாகி உள்ளது. 70 வயதில் வரை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் தமிழ் சினிமாவில், நடிகைகள் 30 வயதை கடந்துவிட்டாலோ, திருமணம் செய்துகொண்டாலோ சினிமா வாய்ப்புகள் கிடைக்காது என்ற நிலைதான் சில ஆண்டுகள் வரை நிலவி வந்தது. அவர்கள் வேண்டுமானால் நடிகரின் அம்மாவாகவோ, சகோதரியாகவோ அல்லது வேறு துணை கதாப்பாத்திரமாகவோ நடிக்கலாம். இல்லாவிட்டால் சின்னத்திரைக்கு சென்றுவிடலாம். இந்த நிலையை மாற்றிக்காட்டியவர்களில் முக்கியமானவர் ஜோதிகா.




மும்பையில் சந்தன், சாதனா தம்பதிக்கு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பிறந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவின் உடன்பிறந்த சகோதரி ஆவார். 1998 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய இந்தி படமான தோலி சஜா கே ரக்னா என்ற படத்தின் மூலம் சினாவில் அறிமுகமானார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் ஜோதிகா. அந்த படத்துக்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் ஜோதிகா.


ஜோதிகாவின் அழகிய முகம், பார்வை, துறு துறு நடிப்பு, பேச்சு என அனைத்தும் அன்றைய 70s, 80s கிட்ஸ் ரசிகர்களை கட்டிப்போட்டது. சிம்ரன், ரம்பா, லைலா என முன்னணி நாயகிகள் இருந்த தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் ஜோதிகா. தொட்டதாலாம் பொன் ஆனது என்று சொல்வதை போல் ஜோதிகா நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர், மெகா ஹிட் வரிசையில் சேர்ந்தன.


முகவரி, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிள் உள்ளத்தை கொள்ளைகொண்டன. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி திரைப்படம் 90களின் காதலர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. குஷி திரைப்படம் விஜய், ஜோதிகா ஆகியோரின் திரை வாழ்வில் பெரும் மாற்றத்தையே கொண்டு வந்தது. அன்றைய  80ஸ் கிட்ஸுகள் தொடங்கி இன்றைய 20கே கிட்ஸுகள் வரை அனைவராலும் ரசிக்கப்படுவது குஷி திரைப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு.


நடிகர் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் துர்காவாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு இன்று வரை அனைவரின் கண்களிலும் வந்துபோகும் அளவுக்கு புகழ்பெற்றது. அந்த கண்களை வைத்து மக்களை மயக்கினாரோ அதே கண்களை வைத்து பேயாக நடித்து மிரட்டி இருப்பார் ஜோதிகா.




2003 ஆம் ஆண்டு சூர்யாவுடன் காக்க காக்க, 2004 ஆம் ஆண்டு பேரழகன், 2005 ஆம் ஆண்டு மாயாவி படத்தையும் 2006 ஆம் ஆண்டு சில்லினு ஒரு காதல் படத்திலும் இணைந்து நடித்தார் ஜோதிகா. சில்லினு ஒரு காதல் படத்தில் இருவரது ஜோடியையும் வெகுவாக ரசித்த ரசிகர்கள் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்குமே என்று கருதினார். செப்டம்பர் 8 ஆம் தேதி அந்த படம் வெளியாக, செப்டம்பர் 11 ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு சில படங்களில் நடித்த ஜோதிகா, விளம்பர படங்களை தவிர்த்து திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார். தேவ், தியா என தனது செல்லக் குழந்தைகளுடன் நேரத்தை கடந்து வந்தார்.


இந்த சூழலில் தான் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலேயே படத்தின் மூலம் முதன்மை கதாபாத்திரமாக நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அந்த படம் ஹிட்டாக அடுத்து காற்றின் மொழி, மகளிர் மட்டும், ராட்சசி, பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்த படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தி  அருகிறார். அண்மையில் வெளியான உடன்பிறப்பே திரைப்படம் அவரது 50 வது படமாக அமைந்தது.


திரையுலகம் மட்டுமின்றி சமூக பணிகளிலும் தனது கணவர் சூர்யாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு செய்பவர் ஜோதிகா. 2 ஆண்டுகளுக்கு முன் ராட்சசி படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரியில்லை என குற்றம்சாட்டினார். கோயில்கள் உண்டியலில் கோடி கோடியாக பணத்தை கொட்டுபவர்கள் மருத்துவமனைக்கு கொடுக்கலாம் என அவர் பேசியதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆனால், ஜோதிகாவுக்கு சூர்யா துணை நின்றார். அவருக்கு ஆதரவாக அறிக்கைவிட்டார்.


வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்திக் கொள்ளாமல், அகரம் அறக்கட்டளை உதவியுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஜோதிகா. இந்தி மட்டுமே தெரிந்துகொண்டு தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான ஜோதிகா இன்று பேசும் தமிழுக்கு அனைவரும் ரசிகர்கள்.


நடிப்பு ராட்சசியான ஜோதிகா இன்று போல் என்று இதே ஜோஷுடன் ஜொலிக்க வாழ்த்துக்கள்.