மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களை காதல் மழையில் நனைய வைத்த 'பிரேமம்' திரைப்படம் பலரால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்தின் 'மலர் டீச்சர்' பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருந்தார். நிவின் பாலிக்கும், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும் மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கி தந்தது அந்த திரைப்படம்.  அல்போன்ஸ் புத்திரன்(Alphonse Puthren) அதன் பிறகு என்ன படம் செய்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த கேள்விக்கு சென்ற வருடமே கரு பதில் தந்திருந்தார். அதாவது ஃபஹத் பாசிலை வைத்து 'பாட்டு' என்னும் ஒரு ம்யூசிக்கல் திரைப்படம் இயக்கும் நோக்கத்தில் இருந்தார் என அறிவிப்புகள் வந்தன. அதில் நயன்தாரா(Nayanthara) கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கூறியிருந்தனர்.



ஆனால் அந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணங்களால் இதுவரை தேதி அறிவிப்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ப்ரித்விராஜையும், நயன்தாராவையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குகிறார். அதற்கு 'கோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ப்ரித்விராஜின் தயாரிப்பு நிறுவனமும், மேஜிக் பிரேமஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. எல்லாம் சரியாக நடந்தேறினால், இந்த மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அல்போன்ஸ் புத்ரனின் முதல் திரைப்படமான தமிழ் - மலையாளம் என்று பைலிங்குவலாக உருவான 'நேரம்' திரைப்படம் போன்ற பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, பிரித்விராஜ் இல்லாமல் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



'பாட்டு' திரைப்படம் இப்போது எடுக்கும் முயற்சிகள் இல்லையென்றும், அது கொரோனா காலமெல்லாம் கடந்த பின்புதான் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுக்கு சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ப்ரித்விராஜுக்கு சமீபத்தில் அமேசான் ப்ரைமில் குருதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 'ப்ரோ டேடி' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.