துருவ நட்சத்திரம் படம் வெளியாவதை சிலர் தடுக்க முயன்றதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான படம் “துருவ நட்சத்திரம்”.  காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட கௌதம் மேனன் இந்த படத்தை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கினார். 

முதலில் சூர்யா நடிக்கவிருந்து இதில் விலக ஹீரோவாக விக்ரம் உள்ளே வந்தார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா,பார்த்திபன், சிம்ரன், ப்ரித்விராஜ் சுகுமாறன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் டீசர் 2018ம் ஆண்டு வெளியானது. 

Continues below advertisement

கொரோனா ஊரடங்கிற்குப் பின் துருவ நட்சத்திரம் படம் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் போனது. இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் பல படங்களில் நடிக்கச் சென்றார். தனக்கு கடன் இருப்பதால் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். பார்க்கும் அத்தனை படங்களிலும் அவர் இருந்தால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வருத்தமடைந்தனர். அதேசமயம் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது துருவ நட்சத்திரம் பற்றி அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல் போவதும் வாடிக்கையாக இருந்தது. 

இப்படியான நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் சிக்கியுள்ள துருவ நட்சத்திரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிட வேண்டும் என உத்தரவை பிறப்பித்தார். இதனால் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சிலர் எனது திரைப்பணியை அழிக்கவும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பால் உருவான எனது திரைப்படம் வெளியாவதைத் தடுக்கவும் முயன்றனர்.ஆனால் எனது சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது எனக்கு ஒரு தீர்வு உண்டு என்று உறுதியளித்து, என்னை அந்தப் பாதையில் வழிநடத்திச் சென்றார்.

இப்போது, ​​மிக முக்கியமான ஒருவரான நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி எனக்கான பாதையை அமைத்துத் தந்துள்ளார்; இதன் மூலம், இறுதியாக அந்த இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தென்பட்டுள்ளது. 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாவதற்கு வழிவகுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவு, முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி நிர்வாகம் அரிதாகவே பின்பற்றப்படும் இத்துறையில், சிக்கலில் சிக்கும் எத்தகைய திரைப்படங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.  இங்கிருந்து, இனி எமது பயணம் மேன்மையை நோக்கியே அமையும்” என தெரிவித்துள்ளார்.