தமிழ் சினிமாவின் அற்புதமான கலைஞர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், 'அருவி' புகழ் அதிதி, யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 


 




டி.வீரசக்தி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் என்றோ முடிந்து இருக்க வேண்டியது ஆனால் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நல குறைவால் சற்று தாமதமானது. அவர் பூரண குணமடைந்த பிறகே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது; இராமநாதன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க, வீரமணியாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, கோமகனாக கௌதம் மேனன்,  அவரின் தங்கையாக அதிதி மற்றும் குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற சிறுமி உள்ளிட்ட இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்.கே.ஏகாம்பரம். 


வித்தியாசமான ரோலில் யோகி பாபு :


யோகி பாபுவை ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்த்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மூலம் அவரின் நகைச்சுவை நடிகர் என்ற முத்திரை உடைக்கப்படும். எள்ளளவிற்கு கூட காமெடி கலக்காத ஒரு கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது. 


 







கௌதம் மேனன் பேசுகையில் :


இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில் " என்னுடைய மிக நல்ல நண்பரான தங்கர் பச்சான் கேட்டுக்கொண்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. சூழ்நிலை காரணமாக அவர் கேட்டபோதும் 'பள்ளிக்கூடம்' திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் இப்படத்தின் கதையை  கூட கேட்காமல் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.


பிறகு பாரதிராஜா சார் இப்படத்தில் நடிக்கிறார் என்றதும் எனக்கு கூடுதல் சந்தோஷம் கிடைத்தது. அதற்கு காரணம் அவருடன் 20 நாட்கள் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்பட்டு முயற்சியும் செய்தேன் என்பது அவருக்கே தெரியாது. அன்று தவற விட்ட வாய்ப்பை இந்த திரைப்படம் மூலம் பயன்படுத்திக்கொண்டேன். படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது.


 


ஒரு நடிகனாக உணரவில்லை :


ஒரு நாவலாக வர வேண்டிய இந்த திரைக்கதை திரைப்படமாவதை நான் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். வீட்டில் என்ன செய்கிறோமோ அதையே இங்கு வந்து செய்தது போல் இருந்தது. நான் என்றுமே என்னை இயக்குநராகவே நினைத்து கொண்டு இருக்கிறேன். நடிகனாக நினைத்ததே கிடையாது. இந்த சமயத்தில் கூட நான் வேறொருவரின் இடத்தில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றுகிறது. உங்களை போலவே நான் இப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்ற இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.  தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.