நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவருக்கும் நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், இருவரும் சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

Continues below advertisement

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகனும் ’தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்தனர்.

2019ஆம் ஆண்டு  முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Continues below advertisement

இருவரும் வெளிப்படையாகவே பல நிகழ்ச்சிகள், பொது இடங்களில் இணைந்து காணப்பட்டாலும் வெளிப்படையாக தங்களின் காதலை தெரிவித்து கொள்ளாமல் இருந்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தான் இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக வெளியுலகிற்கு அறிவித்தனர். 

நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருக்கும் வரும் நவம்பர் 28ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியானது. மேலும், இருவரும் தங்களின் திருமணத்துக்கு கைகளாலேயே தயாரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழைக் கொண்டு அனைவரையும் வரவேற்கிறார்கள் என்பன போன்ற சுவாரஸ்யத் தகவல்களும் முன்னதாக வெளியாகின.

இந்நிலையில் இன்று சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை ஜோடியாக சந்தித்த கவுதம் கார்த்திக் -  மஞ்சிமா இருவரும் பேசியதாவது:

வரும் நவ.28 எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்குத் தேவை. இது ஒரு சிறிய, தனிப்பட்ட குடும்ப நிகழ்வு. ரிசப்ஷன் நிகழ்வு தனியாக நடத்தப்படவில்லை. திருமணத்துக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம்" என்றார்.

 

தொடர்ந்து இருவரது காதல் கதை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கவுதம், "நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்து ஓகே சொன்னார்.

எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையடையச் செய்வார் என என் அப்பா கூறுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா.

தேவராட்டம் படத்தில் பணிபுரியும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்கள் உறவு அடுத்த தளத்துக்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும்போதெல்லாம் என்னை மீட்டெடுக்கிறார்” என்றார்.