கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. 






இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம்  நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.  இந்திய திரையுலகமே பாராட்டிய நிலையில் காந்தாரா படம் நேற்று வசூலில் ரூ.400 கோடியை கடந்தது. ஆனால் 50 நாட்களை கடந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. 






இதனிடையே 400 கோடி வசூலான தகவலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் வண்ணம் காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் (நவம்பர் 24 ஆம் தேதி) அமேசான் பிரைம் தளத்தில் இப்படத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.