நடிகை சாய் பல்லவியின் அடுத்த திரைப்படமான கார்கி வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக, படக்குழுவினர் ஒரு டீஸரைப் பகிர்ந்து கொண்டனர். அதில் சாய் பல்லவி நீதிக்காக போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை என்றும், ஒரு பெண்ணாக தன் மேம்பாட்டிற்காகவும், அதிகாரம் பெறுவதற்காகவும் அவள் போராடுகிறார் என்றும் கூறப்படுகிறது.






இந்தநிலையில், சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கார்கி திரைப்படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்தவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர்.






 


இந்நிலையில் இப்படத்தில் ரிலீசுக்கு முன்னதான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மேடையிலேயே  கண்கலங்கினார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. ஐஸ்வர்யாவை குறிப்பிட்ட போது ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேடையில் பேசிய ஐஸ்வர்யா, சாய் பல்லவியின் நடிப்புத்திறமையை பாராட்டினார். மேலும் தான் ஒரு சாய்பல்லவி ரசிகை என்றும் அவர் குறிப்பிட்டார். படம் குறித்து பேசிய இயக்குநர் கவுதம், ஐஸ்வர்யா இல்லாமல் இந்த படம் இந்த அளவுக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டு பேசினார்.


சாய் பல்லவி..


“பிரேமம்” (மலையாளம்), “ஃபிடா” (தெலுங்கு) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆன்தாலஜி “பாவ கதைகள்” (தமிழ்) ஆகியவற்றால் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை  தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2,  என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து  அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.