தமிழ் திரையுலகின் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவரும், அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.


எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்:


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆருக்கும் மிக மிக நெருக்கமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும், அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.


1953ம் ஆண்டு எம்.ஜி.ஆரை ஆர்.எம்.வீரப்பன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு இவர்களது இருவரது வாழ்க்கையும் உச்சத்திற்கு சென்றது என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆரின் நம்பிக்கையை பெற்ற இவர் எம்.ஜி.ஆரின் அண்ணனுக்கு பிறகு அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார்.


எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்:


எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமான நாடோடி மன்னன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு ஆர்.எம்.வீரப்பனின் பங்கும் அளப்பரியது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாவதற்கும் ஆர்.எம்.வீரப்பனின் பங்கு தவிர்க்க முடியாதது ஆகும்.


பின்னர், ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவீஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். எம்.ஜி.ஆருடனான நெருக்கம் காரணமாக சத்யா மூவிஸ் நிறுவனமும், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஒன்றுடன் ஒன்று தோள் கொடுத்து நின்றன.


தெய்வ தாய் முதல் இதயக்கனி வரை:


தன்னுடைய சத்யா மூவிஸ் மூலமாக வரிசையாக எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த படங்களை தயாரித்தார். சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக எம்.ஜி.ஆர். நாயகனாக நடிக்க சரோஜா தேவி கதாநாயகியாக நடிக்க தெய்வ தாய் படம் உருவானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற எம்.ஜி.ஆர். திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றி பெற்ற நான் ஆணையிட்டால் படத்தை அடுத்த படமாக சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற தாய்மேல் ஆணை இன்று வரை பிரபலம். அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வைத்து காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்‌ஷாக்காரன், இதயக்கனி படங்களை தயாரித்தார்.


ரஜினி, கமலுக்கு ப்ளாக்பஸ்டர் படங்கள்:


எம்.ஜி.ஆர் தீவிர அரசியலில் இறங்கி ஆட்சியை கைப்பற்றிய பிறகு, ஆர்.எம்.வீரப்பனும் அரசியலில் தீவிரமாக இருந்ததால் சத்யா மூவீஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை நடிகர்களை கதாநாயகர்களாக வைத்து படம் தயாரிக்கத் தொடங்கியது. அப்போது, தமிழ் திரையுலகில் வளர்ந்து வந்து கொண்டிருந்த ரஜினி, கமலை வைத்து சத்யா மூவீஸ் நிறுவனம் படத்தயாரிப்பில் இறங்கியது.


ரஜினி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்ததால், ராணுவ வீரன், மூன்று முகம், தங்கமகன் ஆகிய படங்களை தயாரித்தனர். இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக, ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மூன்று முகம் திரைப்படம் மிகப்பெரிய உச்சத்திற்கு ரஜினிகாந்தை கொண்டு சென்றது. அதில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரமும், தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீப்பிடிக்கும்.. இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் வீசுனாலும் தீப்பிடிக்கும் வசனம் இன்றளவும் பிரபலம் ஆகும்.


ரஜினியை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாட்ஷா:


ரஜினிகாந்தை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தது போலவே, கமல்ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கிச்சட்டை படங்களையும் தயாரித்தனர். அந்த படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர், ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன், பணக்காரன் படங்களை தயாரித்தனர். அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியை குவித்தது.


இடையிடையில் சத்யராஜ், அர்ஜூன் ஆகியோரை வைத்தும் சத்யா மூவீஸ் நிறுவனம் படங்களை தயாரித்தது. ரஜினிகாந்த் திரைவாழ்வில் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்ற படமான பாட்ஷா படத்தை தயாரித்த நிறுவனம் சத்யா மூவீஸ். 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்திற்கு பிறகே திரைப்படங்களில் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவமும், கமர்ஷியல் படங்களில் பாட்ஷா சாயலும் இருந்து வருகிறது.


அதன்பின்பு பெரியளவில் திரைப்பட தயாரிப்பில் சத்யா மூவீஸ் நிறுவனம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஆர்.எம்.வீரப்பனுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில், அவரது மூத்த மகள் திருமதி செல்வியை சத்ய ஜோதி மூவீஸ் நிறுவனர் டி.ஜி.தியாகராஜன் திருமணம் செய்துள்ளார். இவர் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனர் வீனஸ் கோவிந்தராஜனின் மகன் ஆவார். சத்யஜோதி நிறுவனம் உருவாகிய பிறகு சத்யா மூவீஸ் நிறுவனம் சார்பாக ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பிற்கு ஒத்துழைப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


1964 முதல் 1995ம் ஆண்டு வரை சத்யா மூவீஸ் நிறுவனம் தெய்வ தாய், நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதல், கன்னி பெண், ரிக்ஷாக்காரன், மணிபயல், இதயக்கனி, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது. ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், காக்கிச்சட்டை, மந்திர புன்னகை, ஊர்க்காவலன், காதல்பரிசு, புதிய வானம், என் தங்கை, பணக்காரன், நிலா பெண்ணே, புது மனிதன், பாட்ஷா ஆகிய படங்களை தயாரித்தனர். எம் மகன் படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க சத்யா மூவீஸ் நிறுவனம் விநியோகித்தது.