கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என  தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. 


சிறப்பு ரயில்கள்:


தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள். இது ஒரு பக்கம் இருக்க பயணிகளின் வசதிக்காக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.


அந்த வகையில், கோடை விடுமுறையை முன்னிட்டி சென்னை முதல் நெல்லை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வண்டி எண்: 06070 திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும். இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23 மற்றும் 30 (வியாழக்கிழமைகளில் மட்டும் இயங்கும்) ஆகிய தேதிகளில் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்.


அதேபோல் மறுமார்க்கமாக, வண்டி எண்: 06069 சென்னை  முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுகிறது. ஏப்ரல் 12,19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (வெள்ளிகிழமை தோறும்) இயக்கப்படும். மதியம் 3 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும். இதில் ஒரு 2 டயர் ஏ.சி பெட்டி, 6 – 3 டயர் ஏ.சி பெட்டிகள், 9 – ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 – ஜெனரல் கிளாஸ் பெட்டிகள், 1 செகண்ட் கிளாஸ் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.


இந்த கோடை சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர்  வரை இயக்கப்படுகிறது.