சபாபதி


ஆர்.சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த, சபாபதி (சந்தானம்) பேச்சு ஒழுங்கின்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதை. தனது இந்த பிரச்சனையால், பிறரால் அவமதிக்கப்படுவது, கேலிக்குள்ளாவது என அவர் நிறைய சவால்களை சந்திக்கிறார். இதனால் வேலையில்லாத பட்டதாரியாக சுற்றி வரும் சபாபதி, ஒருபக்கம் சமூக நெருக்கடியையும் தன் கண்டிப்பான தந்தையையும் (எம்.எஸ். பாஸ்கர்), எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில் அவருக்கு ஒரு பணம் நிரப்பப்பட்ட சூட்கேஸ் கிடைக்கிறது. அது அவரது வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போடுகிறது. இதன் பின் நடப்பது என்ன என்பதே சபாபதி படத்தின் கதை. இன்று (ஜூன் 18) மதியம் 1 மணிக்கு கலர்ஸ் தமிழில் இந்தப் படம் ஒளிபரப்பாகிறது.


60 வயது மாநிறம்


இளையராஜா இசையில், ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த "60 வயது மாநிறம்" அப்பா-மகனுக்கு இடையேயான மென்மையான உறவைப் பற்றி பேசும் திரைப்படம். சிவா (விக்ரம் பிரபு), ஒரு இலட்சியமிக்க மென்பொருள் பொறியாளர், வெளிநாட்டில் IT வேலையில் சேரும் தனது கனவைத் தொடர தனது தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார். அப்போது முதியோர் இல்லத்தில் ஏற்படும் ஒரு குழப்பத்தில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட சிவாவின் தந்தை கோவிந்தராஜன் (பிரகாஷ் ராஜ்) காணாமல் போகிறார்.
இதன் தொடர்ச்சியாக நடப்பது என்ன என்பதை, மனித மனத்தின் உணர்வுப்பூர்வமான பக்கங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம் "60 வயது மாநிறம்". இந்தப் படம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.


சில நேரங்களில் சில மனிதர்கள்


அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்”. காலமும் சூழலும் மனிதர்களை எவ்வாறு ஆட்டுவிக்கிறது என்பதை மனித உளவியல் அடிப்படையில்  பேசும் உணர்வுப்பூர்வமான திரைப்படம். மொபைல் போன் விற்கும் கடையில் வேலைப்பார்க்கும் விஜயகுமார் (அசோக் செல்வன்), தாயை இழந்தவர். அவரது  தந்தை பணி ஓய்வுப்பெற்ற செல்வராஜ் (நாசர்)  மகன் மீது அளவற்ற அன்பு காட்டுபவர். மகனின் திருமண பத்திரிகையை கொடுக்கப்போகும் வழியில் ஒரு விபத்தில் இறந்துப்போகிறார்.  அந்த மரணத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ மூன்று இளைஞர்கள்  காரணமாகின்றனர். விஜயகுமார் உட்பட வெவ்வேறு வாழ்க்கையை வாழும் இந்த மூவரையும், ஒரு மரணம் எப்படி தங்கள் தவறுகளிலிருந்து திருத்துகிறது என்பதே இந்தப்படம்.  இன்று மாலை 6:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் இப்படம் ஒளிபரப்பாகிறது.


காலேஜ் குமார்
 
இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலேஜ் குமார். மகன்களை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என கனவு காணும் அப்பாக்களுக்கும், அவர்களின் கனவை அசட்டை செய்யும் மகன்களுக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டம் காலேஜ் குமார். தனது அலுவலகத்தில், தன்னுடைய உயர் அதிகாரியால், வெறும் பியூன் தானே  நீ ! என் அசிங்கப்படுத்தப்படும் திருக்குமரன்(பிரபு) தனது மகனை எப்படியாவது அந்த உயர் அதிகாரியின் பதவியில் உட்கார வைப்பேன் என சபதம் எடுக்கிறார். ஆனால் மகனோ, பொறுப்பில்லாமல் நடந்ததால் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதனிடையே திருக்குமரனின் சபதம் நிறைவேறியதா என்பதே  மீதி கதை. இப்படம் இன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


இந்த நான்கு திரைப்படங்களும் அடுத்தடுத்து இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.