ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா பொடுவால் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகாவும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இந்தி தொலைக்காட்சி தொடராக 'குட்டன் தும்சே நா ஹோ பயேகா'வின் ரீமேக் சீரியல்தான். ஆனாலும் தமிழில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றாலே அழுகாச்சி சீன்களும், அடுத்தவர் குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்று பக்கா பிளான் போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக தான் இருந்துகொண்டிருக்கும். ஆனால் இந்த சீரியல் இதற்கு எல்லாம் மாற்றாக இருக்கிறது. ஜாலியான கேரக்டராக அந்த சீரியலில் ஹாசினி கேரக்டரில் கீர்த்தனா பொதுவால் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமித் பார்கவ், அபினவ் ஜனார்த்தனன் என்றும் ஷாட்டாக ஏஜே என்றும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் எப்போதுமே எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை தொடராக்கி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள் சீரியலுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



பழனிசாமி என்பவர் இயக்கத்தில் ஹிட்டாக ஜீ தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியல் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இந்த தொடர் வெகு மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது. ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சீரியல் குறித்து ஒரு தகவல் வெளியாக ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். அது என்னவென்றால் விரைவில் தொடர் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதாம், இதைக்கேட்ட ரசிகர்கள் நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது ஏன் நிறுத்துகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். 232 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி இருக்கும் இந்த தொடரை எப்போது முடிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் க்ளைமேக்ஸை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.



ஏஜேவின் மருமகள்கள் வில்லத்தனம் செய்து மிரட்டி மிரட்ட எல்லாமே ஒரு கட்டத்தில் ஃபெயிலியர் ஆகி ஹாசினிக்கு சாதகமாகத்தான் அமைந்து கொண்டிருக்கிறது. ஹாசினி இவர்களை கண்டுகொள்ளாமல் போனாலும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த மருமகள்களின் தொல்லையிலிருந்து ஹாசினி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த கதை. ஹாசினியும், ஏஜேவும் விதியின் வசத்தால் ஒன்று சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்து விடுகின்றனர். ஹாசினி திருமணம் முடிந்து ஏஜேவின் வீட்டிற்கு வந்த நாள் முதலே அவரை எப்படியாவது வெளியே போக வைத்து விட வேண்டுமென்று மூன்று மருமகள்களும் கங்கணம் கட்டிக்கொண்டு ஹாசினிக்கு எதிராக செயல்களை செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் ஹாசினிக்கு துணையாக அம்பிகா இருந்து கொண்டிருக்கிறார். அப்படி மிகவும் ஸ்வாரஸ்யமாக சென்றுகொண்டிருந்த இந்த தொடர் சீக்கிரமே முடிவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.