தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) மறைவை தொடர்ந்து, அவரை கடைசியாக ஒருமுறை வந்து பார்க்குமாறு நடிகர் வடிவேலுவுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு ’கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு கட்சி, சினிமாவில் விருப்பு, வெறுப்பின்றி அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருவதால் தீவுத்திடல் முழுக்க மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.


இப்படியான நிலையில் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடைசியாக ஒருமுறை சென்று காண வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இடம் பெற்றது. அத்தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்திற்காக களமிறக்கப்பட்டார் வடிவேலு. அவர் பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்தார். இதனைக் கேட்டு தமிழ்நாடு மக்களே அதிர்ச்சியடைந்தனர். 


அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. வடிவேலு விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் கோபப்பட வேண்டிய விஜயகாந்த் வடிவேலுவை நினைத்து வருத்தப்பட்டதாக பிரமலதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் பேசியுள்ளார்.


“அவரெல்லாம் பிறவி கலைஞன். எல்லா தயாரிப்பாளரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். விஜயகாந்தும் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டார்” எனவும் பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வடிவேலுவும் விஜயகாந்தும் ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து செய்யும் காமெடிகள் என்றைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமானது. 


அப்படி சினிமாவில் தன்னை வளர்த்தவர்களில் ஒருவரான விஜயகாந்தை வடிவேலு நேரில் சென்று பார்த்து தன் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பொதுவாக சினிமா பிரபலங்களின் சுக, துக்க நிகழ்வுகளில் பங்கு பெறாத நடிகர் வடிவேலுவின் செயல் திரையுலகிலும் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.