சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி சீரியலான ‛எதிர் நீச்சல்’ பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று தம்பிகளை தன் வசம் அடிக்கி ஆள நினைக்கும் மூத்த அண்ணன் குணசேகரன், தன் கடைசி தம்பி சக்தியை கோவைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவரது மனைவி ஜனனிக்கு குடைச்சல் கொடுத்து வந்தார். அவரை தனிமைப்படுத்தி சித்தரவதை செய்த நிலையில், இதை அறிந்த சக்தி, ஜனனியை கோவைக்கு அழைத்தார். 




வீட்டு மருமகள்களிடம் மட்டும் தகவல் கூறிவிட்டு, கணவரிடம் சென்று விட்டார் ஜனனி. தனக்கு தெரியாமல் நடந்த இந்த போக்குவரத்தை அறிந்த குணசேகரன் குதித்துக் கொண்டிருக்கிறார். தன் பேச்சை மீறி தன் தம்பியும், தம்பி மனைவியும் நடப்பதால், அவர்களை நடக்கவிருக்கும் புது இல்ல கிரகபிரவேசத்திற்கு வரக்கூடாது என்று உத்தரவிடுகிறார். 


கிரகபிரவேசத்தில் சக்தியும் அவர் மனைவி ஜனனியும் பங்கேற்பார்களா என்கிற கேள்விக்குறியோடு நேற்றை எபிசோடு தொடங்கிய நிலையில், ஒரு சாமியாரை அழைத்து வந்த கிரகபிரவேச நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கேட்ட குணசேகரனுக்கு ஒரே அதிர்ச்சி. மக நட்சத்திரத்தில் பிறந்த மருமகள் தான், பூஜைகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அந்த சாமியார். எந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூறினோமோ, அதே மருமகள் ஜனனி தான் மக நட்சத்திரத்தில் பிறந்தவர். 




இதனால், கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார் குணசேகரன். இங்கு வீடே களேபரம் ஆகிக்கொண்டிருக்க, மறுமுனையில் கணவரோடு கோவையில் ஹாயாக விருந்து உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜனனி, வீடு திரும்பப் போகிறார். கணவரோடு வரும் அவரை, கண்டிப்பாக அவரது கணவரின் அண்ணன் குணசேகரன் கடிந்து கொள்வார் என்பது அவருக்கு தெரியும். ஆனாலும், அதை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து கணவரிடம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.


கொலைவெறியோடு காத்துக் கொண்டிருக்கும் குணசேகரன், சாமியார் சொன்ன குறிக்கு மதிப்பளித்து சக்தி மற்றும் ஜனனியை கிரகபிரவேசத்தில் அனுமதிப்பாரா, அல்லது தன் கவுரவம் தான் முக்கியம் என , அவர்களை அவமதித்து வெளியே அனுப்புவாரா என்கிற வகையில் இன்றைய எபிசோடு பரபரப்பாக இருக்கப் போகிறது. 


வீட்டின் இளைய மருமகளுக்கு என்ன நடக்குமோ என்று, பிற மருமகள்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விசேசம் நன்றாக நடக்க வேண்டும் என, மாமியார் வேண்டிக் கொண்டிருக்கிறார். மூத்த அண்ணனுக்கு ஆதரவாக இளைய அண்ணன்களும் இணைந்து விட்டார்கள். இத்தனை பிரச்னைகளையும் சமாளிப்பாரா சக்தி?