நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து, அகில இந்திய சினிமாவிற்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த படம், எந்திரன். வசீகரன் விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பிற்காக தயாரிக்கும் ரோபோ, பின்னாளில் நாட்டிற்கே அச்சுறுத்தலாக மாறுகிறது. ஒரு ரோபோவிற்கு உணர்ச்சிகள் வந்தால், அதன் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதை துல்லியமாக காட்டிய படம் இது. அந்த ரோபோவை, கடைசியில் செயலிழக்க வைப்பது போன்று க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். இதுதான் எந்திரன் படத்தின் கதை.


இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டம், ஐஸ்வர்யாராயின் அழகான நடிப்பு, ரஜினியின் ஸ்டைல், ஏர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் என அனைத்தும் எந்திரன் படத்தில் அம்சமாக பொருந்த, இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படதத்தின் க்ளைமேக்ஸில், அடுத்த பாகத்திற்கான சிறிய ஹிண்ட் கொடுத்திருப்பர். அந்த படத்தின் இரண்டாம் பாகமும் 2.0 என்ற பெயரில் வெளியானது. ஆனால் முதல் படத்தைப் போல எதிர்பார்த்த வெற்றியையோ, ரசிகர்களின் வரவேற்ப்பையோ 2.0 பெறவில்லை.




ரசிகர்களை ஏமாற்றிய 2.0:


எந்திரன் படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு தயாரான 2.0 திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு இருந்தது. பாலிவுட் நடிகர்கள் யார் தமிழுக்கு வந்தாலும், அவர்கள் மேல் ஆடியன்ஸிற்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், இப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக விளங்கும் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். செல்போன் டவர்களால் அதிகம் அழியும் பறவை இனம், இதனை தடுக்க செல்போன் பயன்படுத்துவோரை தண்டிக்கும் பக்ஷி ராஜன், அந்த வில்லனை தடுக்க போராடும் விஞ்ஞானி மற்றும் அவனது ரோபோக்கள். இதுதான் கதை. முதல் பாகத்தில் ஹீரோயினாக வந்த ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் மிஸ் ஆக, அந்த இடத்தை நிரப்பும் வகையில் எமி ஜாக்ஸனை இறக்கினர். 


2.0 படத்திற்காக ஹாலிவுட்டிற்கே டஃப் கொடுக்கும் க்ராஃபிக்ஸ், தெரிக்கவிடும் விஎஃப்எக்ஸ், காதைக்கிழிக்கும் இசை என உருவாகியிருந்தது 2.0. இவ்வளவு அம்சங்கள் இருப்பினும் ரசிர்களிடமிருந்த “நம்மள ஏமாத்திட்டாங்க பரமா..” என்ற ஒற்றை வசனமே விமர்சனமாக வந்தது. 




குழந்தைகளுக்கு பிடித்த குட்டி ரோபோ:


2.0 படத்தின் படப்பிடிப்பையடுத்து, படக்குழு அனைவரும் ப்ரமோஷன் பணிகளில் இறங்கி விட்டனர். குறிப்பாக எந்த படத்திற்கும் பெரிதாக நேர்காணல் கொடுக்காத ரஜினி, இப்படத்திற்காக மெனக்கெட்டு நேர்காணல்களை வழங்கினார். அந்த நேர்காணல்களின் போது, “குழந்தைகளுக்கு பிடித்த அம்சம் ஒன்று படத்தில் உள்ளது. அதை படத்தை காணும் போது புரிந்து கொள்வீர்கள்..” என்று சஸ்பன்ஸ் வைத்தார். படம் வெளியானவுடன்தான் தெரிந்தது அந்த சஸ்பன்ஸ் என்னவென்று. வில்லனை அழிக்க சிட்டி ரோபோ பயன்படுத்தும ஒரு ஆயுதம்தான் அந்த சஸ்பன்ஸ். செல்போன் வடிவில் குட்டி குட்டியாக செயல்படும் அந்த குட்டி சிட்டி ரோபாேவை குழந்தைகளுக்கு பிடித்ததா என்பது கேள்விக்குறியே. 


பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்


ரசிகர்களின் பல நாட்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய இப்படம், வசூலிலும் பெரும தோல்வியையே சந்தித்தது. லைகா ப்ரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் 570 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், உலகளவில் சுமார் 190 கோடியே வசூலித்தது. இதனாால், ரஜினி ரசிகர்கள் உள்பட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே அப்செட் ஆகினர்.