நடிகர் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்ட துல்கர் சல்மான், விஜய் அண்ணாவை சந்தது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலரது பெயர்களையும் அவர் டேக் செய்துள்ளார்.  துல்கர் சல்மான் தற்போது 3 வது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பேமிலி மேன் சீரிஸில் தற்போது நடித்து வருகிறார். 


இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கி வருகின்றனர். இந்த இரு ஷூட்டிங்கும் நடந்த சமயத்தில் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  துல்கர் சல்மான் பகிர்ந்த புகைப்படத்தில் ஒரு ஓரமாக விஜய் சேதுபதி நிற்கிறார். இதனைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்ட ரசிகர்கள் பலர், பவ்வியமாக ஓரமாக நின்றாலும் விஜய் அண்ணா என உரிமையோடு விஜய் சேதுபதியை, துல்கர் குறிப்பிட்டுள்ளாரே எனப் பாராட்டி வருகின்றனர். சன்னி டியோல், துல்கர், பூஜா பட் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.




முன்னதாக, மனோஜ் பாய்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் ஜூன் மாதம் 'தி பேமிலி மேன் சீசன் 2' வெளியானது. இதை இரட்டை இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கியிருந்தார்கள். இந்தியில் மிகவும் பிரபலமானது இவர்களின் டைரக்ஷன். தெலுங்கில் சில படங்களுக்கு புரொடியூசராகவும் இவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பேமிலி மேன் சீசன் 2 பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.  இந்த ட்ரெய்லர் வெளிவந்த நாளிலிருந்தே ஈழப் போராளிகளை தவறாக சித்தரித்துள்ளனர் என பலரும் தங்களை எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த சீரிஸ் வெளியிடவும் கூடாது எனவும் தெரிவித்திருந்தனர். 


இது குறித்து அப்போது விளக்கம் அளித்த இயக்குநர் ''டிரைலரில் உள்ள ஒன்றிரண்டு காட்சிகளை வைத்து முடிவு செய்ய வேண்டாம். எங்களுடைய எழுத்தாளர்கள் குழுவில் பெரும்பாலானோர் தமிழர்கள். நாங்கள் தமிழர்களின் உணர்வுக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பளிக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். தொடர் வெளியாகும் வரை காத்திருக்கவும். பின்னர் நீங்களே பாராட்டுவீர்கள்''என்றனர். ஆனால் வெப் சீரிஸ் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.





சீமான், பாரதிராஜா, வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த வெப் சீரிஸின் ஈழத் தலைவராக மைம் கோபி நடித்திருந்தார். இவரது கேரக்டருக்கு முதலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாகவும் இவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன. மேலும், ராஜ் அண்ட் டிகே அடுத்து எடுக்கயிருக்கும் 'தி பேமிலி மேன் 3' வெப்சீரிஸில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. பின்னர் தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஷூட்டிங் சென்றுகொண்டிருக்கிறது.