திமுக - அதிமுக என இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ்நாட்டில் ’கேப்டன்’ விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் உருவானது  கருணாநிதி ஜெயலலிதாவின் டாம் அண்ட் ஜெர்ரி அரசியலால் போரடித்துப்போன மக்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது எனலாம். 2005ல் கட்சித் தொடக்கம் 2011ல் அடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் என அவர் சிக்ஸர் அடித்தது கழகங்களை கதிகலங்கச் செய்தது, மக்களிடமும் மத்தாப்பூத் தீப்பொறி அளவிலான நம்பிக்கையைக் கொடுத்தது. அரசியல் மட்டுமல்ல சினிமா வாழ்க்கையும் அவருக்கு அப்படித்தான்.





காங்கிரஸின் மதுரை மாவட்ட நிர்வாகியான அழகரின் மகனான விஜயராஜ்தான் பின்னாளில் விஜயகாந்த் ஆனார். இவரது பெயரை மாற்றியவர் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா. 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.தூரத்து இடி முழக்கமும் சட்டம் ஒரு இருட்டறையும் அவரை ஹீரோவாக்கியது. தமிழ் சினிமா என்றாலே ரஜினி-கமல் என இரண்டு துருவங்கள்தான் என நினைத்திருந்தவர்களுக்கு தான் ’துருவ நட்சத்திரம்’ நினைவூட்டியவர். ரஜினி என்றால் லாஜிக்கை மீறிய ஸ்டைல் வகையறா கமர்ஷியல் சினிமாக்கள், கமல் என்றால் திகட்டத் திகட்ட காதல் ரொமான்ஸ் என இருந்த தமிழ் சினிமாவில் மண்வாசம், அதிரடி ஆக்‌ஷன், சிவந்த கண்களுடன் பொறிபறக்க வசனங்கள் என விஜயகாந்தை ’சி’ செண்டர்களுக்கான சூப்பர் ஸ்டாராக்கியது.




தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் பின்னாளில் அவரது தே.மு.தி.க.,  சரியத் தொடங்கியது வேறுகதை என்றாலும்  விஜயகாந்த் என்னும் தனிமனிதரின் பெர்சனல் பக்கங்களைத் திருப்பினால் ‘நல்ல மனசுக்காரன்’ என ஒற்றை வார்த்தையில் அவரைக் குறிப்பிட்டுவிடலாம்.. 




’கேப்டன்’ விஜயகாந்த் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது அவரது நட்பு வட்டம்தான். தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர்- விஜயகாந்தும் ஒரு ரியல் லைப் தேவா-சூர்யா. விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரனைத் தயாரித்தவர் ராவுத்தர். தனது நண்பனுக்கான ஒரு ரயிலையே நாற்பது நாட்கள் வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு இவர்களது நட்பு வேற லெவல்.இதுதவிர சென்னை லிபர்ட்டி, பாண்டிபஜார் ரோகினி என ஒவ்வொரு ஏரியாவும் இவர்களது நட்பின் கதையைச் சொல்லும் என்கிறார்கள் இவர்கள் இருவரையும் நன்கு அறிந்தவர்கள். ராவுத்தர் உடல்நலைக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது தேமுதிக நடத்திய இப்தார் நோன்பில் தனது நண்பனுக்காக அல்லாவைப் பிரார்த்திக்கச் சொல்லி கோரிக்கை வைத்தவர் விஜயகாந்த். அடித்தாலும் பிடித்தாலும் அன்பு மட்டும் குறையாது என்னும் கணக்காக இவர்கள் நட்பில் விரிசல் விழுந்தபோதும் கூட இவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உணவு உண்பது, அவர்கள் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் தருவதெல்லாம் விஜயகாந்துக்கே உண்டான பாணி. நண்பர்களின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் அவர்கள் வீட்டுச் சமையலறையில் உணவை உரிமையோடு எடுத்து உண்ணும் விஜயகாந்தை போன்ற வெளிப்படையான மனிதரை வேறு யாரிடமும் காணமுடியாது என நினைவுகூர்கிறார்கள் அவரது நண்பர்கள்.  


 விஜயகாந்துக்கும் பிரேமலதாவுக்கும் திருமணம் என முடிவானது, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டு திருமண மண்டபமும் புக் செய்யப்பட்டது. ஆனால் விஜயகாந்துக்கு மண்டபத்தைத் தரமுடியாது என மண்டப உரிமையாளர் மறுக்க நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவருக்காகப் போராடி அதே மண்டபத்தில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள்.திருமணம் முடிந்து மதுரை தமுக்கம் மைதானத்தில் ஓப்பன் ஜீப்பில் ஊர்வலம் சென்றதெல்லாம் விஜயகாந்த் நண்பர்களின் கலாட்டா ஐடியாக்கள்தான். 




சினிமாத்துறையில் அவருக்கும் நடிகர் சத்யராஜுக்குமான நட்பு பற்றி பலருக்குத் தெரியாது. 2009ல் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் மணிவண்ணன் எழுதிய நாடக ஒன்று பெரியார் திடலில் அரங்கேற்றப்பட்டது. அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்து  அதில் வந்தப் பணத்தை ஈழத்துக்காக எடுத்துக் கொடுத்த விஜயகாந்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் சிலாகிப்பார் சத்யராஜ். ‘ ஈழத்துக்காக நிதியுதவி அளித்த முதல் தமிழ் நடிகர்’ என்பார் அவர். விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சமயம் நட்சத்திரக் கலையிரவு ஒன்றை முடித்துவிட்டு நடிகர்கள் பட்டாளம் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தது, ஆர்டர் செய்த உணவில் பற்றாக்குறை, என்ன செய்வது எனத் தெரியாமல் விஜயகாந்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அடுத்த ரயில் சந்திப்பிலேயே கட்டிய லுங்கியுடன் இறங்கி எல்லோருக்குமான உணவை ரயில் கேண்டீனில் வாங்கிய விஜயகாந்த் தன்னை மிரள வைத்ததாக சத்யராஜ் குறிப்பிடுவார். 


கொண்டாடித் தீர்த்தாலும் தீராது போகும் வெள்ளந்தி மனசுக்காரன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று! பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்!  

Also Read: மகன் முன்னிலையில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!