நடிகர் திலகம் சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது  என இறுகப்பற்று படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் யுவராஜ் தெரிவித்துள்ளார். 


பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள  “இறுகப்பற்று” படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர்  நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இறுகப்பற்று படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. நீண்ட நாளுக்குப் பிறகு நல்ல படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இப்படியான நிலையில் நேற்று இறுகப்பற்று படக்குழுவின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் யுவராஜ் தயாளன், ” கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பத்திரிகையாளர் காட்சி முடிந்த அன்று இரவு தான் நிம்மதியாக தூங்கினேன். அதுவரை எங்கள் படமாக இருந்தது. அதன்பிறகு உங்கள் படமாக எடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். ஒரு படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது, சூப்பர் என்று சொல்வார்கள். ஆனால் முதன்முறையாக நன்றி என சொல்வது எனக்கு புதிதாக இருந்தது. படம் பார்த்துவிட்டு மனைவி தனது கணவனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், கணவன் நீண்ட நாளைக்கு பிறகு தன்னிடம் இரண்டு மணி நேரம் செலவிட்டு பேசியதாகவும், இப்படம் முன்பே வந்திருந்தால் எங்களது ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றி இருப்பேன் என்பது போன்று பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட என்னை ஒரு மனோதத்துவ நிபுணராகவே ஆக்கி விட்டார்கள் என நினைக்கிறேன்.


படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை கடைசி சாய்ஸ் ஆகத்தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம் இதே கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஸ்ராத்தாவிற்கு இந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது. படத்தின் மொத்த வசனங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு மட்டுமே 38 சதவீதம் வசனங்கள். படப்பிடிப்பில் அவர் அதை அழகாக பேசியதற்கும் அவருக்கு பொருத்தமாக டப்பிங் குரல் கொடுத்த ஸ்மிருதிக்கும் எனது நன்றி.  


நடிகை அபர்ணதி இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். ஆனால் என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான்.. அவர் காலில் மட்டும் தான் விழவில்லை.. அந்த அளவுக்கு கெஞ்சினேன்.  நான் எந்த காட்சியை படமாக்குகிறேனோ அதை மூடிலேயே இருக்க விரும்புவேன். ஆனால் அவர் சீரியஸான காட்சியில் நடித்துவிட்டு வந்து என்னிடம் ஜாலியாக பேசி மூடை மாற்ற முயற்சி செய்வார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன்.. 


விதார்த்தம் நானும் 13 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தான் வடிவேலுவின் படம் எனக்கு வந்தபோது வேறு வழியின்றி அந்தப்படத்தை கைவிட நேர்ந்தது. விதார்த்தும் அதை பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு என்னை அனுப்பி வைத்தார். அந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தை அவருக்கு கொடுத்திருக்கிறேன்.


ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கத்தான் வந்தார். அதன்பிறகே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் நடிக்கும் போதே நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என பெர்சனல் ஆகவே ஃபீல் பண்ணி பேசுவார். இப்படம் பார்த்துவிட்டு அவரை வைத்து ரொமான்ஸ், லவ் படம் எடுக்கலாம் என யாரும் நினைக்காதீர்கள். லவ் சீனை பொறுத்தவரை அவருக்கு நடிக்கவே தெரியாது. யாராவது அவரை வைத்து லவ் படம் எடுக்கதா இருந்தால் என்னிடம் கேட்டு விட்டு படம் பண்ணுங்கள். அந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருக்கிறார், ஶ்ரீ.


விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டாரர் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம். விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்ததுமே அதை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர் நடித்து முடித்ததும் சுற்றி இருந்தவர்கள் பலமாக கைதட்டி பாராட்டினார்கள். இருந்தாலும் இன்னொரு டேக் போகலாம் என கூறியபோது இத்தனை பேர் கைதட்டினார்களே இது சரியாக இல்லையா என்று அவர் கேட்டாலும் கூட, எனக்காக மீண்டும் ஒருமுறை அந்த காட்சியில் நடித்தார் விக்ரம் பிரபு.


அவருக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். சிறுவயதில் சிவாஜியின் படத்தைக் காட்டி இவர்தான் உன்னுடைய தாத்தா என்று சொல்வார். நானும் அவரையே என்னுடைய தாத்தா என்று எல்லோரிடமும் கூறுவேன். பள்ளி தலைமை ஆசிரியரே என் தந்தையை அழைத்து விசாரிக்கும் அளவிற்கு சிவாஜி தான் என் தாத்தா என நம்பினேன். அதன்பிறகு அவர் என் தாத்தா இல்லை என சொன்னதும் அழுதுவிட்டேன். சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார்.


தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் ஒத்துழைப்பால் இப்படத்தை முழுவதுமாக நான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. நான் டென்ஷனாக இருந்தாலும் கூட அவர் ரொம்பவே கூலாக விஷயங்களை டீல் செய்தார். நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு  சாரும் ஒருவர். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும்போது நாளை தான் என் படம் ரிலீஸ் ஆகிறது என்பது போல உணர்கிறேன்” என்று கூறினார்.