மறைந்த நடிகர் விவேக்குடன் 3, 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்ததாக இயக்குநர் சுந்தர்.சி, நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்பட்டவர் விவேக். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். விவேக்கின் மறைவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை உண்டாக்கி விட்டது. சமூக பிரச்சினைகளையும் தீர்வுகளையும் தன் காமெடி வழியாக ரசிகர்களுக்குத் தெரிவிக்கும் பாணியை விவேக் தனது கடைசி காலம் வரை கடைபிடித்து வந்தார். 


விவேக்குடன் கருத்து வேறுபாடு


இப்படியான நிலையில் இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் விவேக் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, “விவேக் என்னுடைய சில படங்களில் நடித்தார். அதன் பிறகு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு 3, 4 ஆண்டுகள் நாங்கள் எந்தப் படங்களிலும் பணியாற்றவில்லை. நான் இயக்கிய வின்னர் படத்தில் முதலில் காமெடி கேரக்டரில் விவேக் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் வடிவேலு வந்தார்.


அதன்பிறகு வீராப்பு படத்தில் முதலில் காமெடியனாக சந்தானத்தை புக் செய்திருந்தார்கள். அவர் அப்போது தான் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். இதனிடையே அப்படத்தின் இயக்குநர் பத்ரி திடீரென வீராப்பு படத்தில் ஒரு காமெடி டிராக் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என சொன்னார். அப்போது நாங்கள் திருநெல்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தோம். 


வீராப்பு பட காமெடி டிராக்


என்னிடம் விவேக்கை போடலாம் என பத்ரி சொன்னார். ஆனால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. காரணம் அவர் மூத்த நடிகர். ஸ்பாட்டில் போய் உட்கார்ந்து கொண்டு ஷூட்டிங் வர சொல்வது கஷ்டமான விஷயம். அப்படியே வந்தாலும் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு மாதிரி என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு காமெடி டிராக் பண்ணலாம் என ஐடியாவோடு விவேக்கை அணுகினோம். 


அவர் எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக நடிக்கிறேன் என சொன்னார். விவேக்கும், அவருடைய காமெடி ட்ராக் எழுதுபவரும் ஒரே நாளில் காமெடி காட்சிகளை எழுதினார்கள். அதன்பிறகு விவேக்குடன் எத்தனையோ படங்களில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம். கடைசியாக நான் இயக்கிய அரண்மனை 3 படத்தில் நடித்தார். 


‘என் தனிப்பட்ட இழப்பு’


அந்தப் படத்துக்காக 25 நாட்கள் குஜராத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் அரண்மனை கெஸ்ட் ஹவுஸில் தங்கி நடித்து கொடுத்தார். அங்கு டிவியோ, செல்போன் சிக்னலோ எதுவும் இருக்காது. சுற்றி காட்டுப்பகுதியாக இருக்கும் நிலையில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி நடைபயிற்சி எல்லாம் சென்றார். அப்படிப்பட்டவர் அரண்மனை படம் டப்பிங் பேசிவிட்டு வெள்ளிக்கிழமை எனக்கு போன் செய்தார். ஒரு டயலாக் மாற்ற வேண்டி இருக்கு. நான் திங்கட்கிழமை வந்து மாற்றி தருகிறேன் என சொன்னார். ஆனால் வரவே இல்லை. விவேக் மறைந்து விட்டார். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த இழப்பு” என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.