ஐபிஎல் 2024 இன் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை, மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியே சென்றது. மற்ற 9 அணிகளுக்கும் இடையே டாப்-4-ல் நீடிப்பதற்கான போர் இன்னும் நடந்து வருகிறது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் புள்ளிகள் பட்டியலில் முறையே 7வது மற்றும் 8வது இடத்தில் உள்ளன. மேலும், இரு அணிகளும் தற்போது தலா எட்டு புள்ளிகளுடன் உள்ளனர். இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க இந்த மோதல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


தோற்ற அணி வெளியே..? 


ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, அடுத்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் கட்டாய வெற்றியினை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி வெளியேற்றப்பட உள்ளது. ஏனெனில் இன்று தோல்வியடைந்த அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிஅக்ள் தற்போது 12 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், லக்னோ மற்றும் டெல்லி இடையே இன்னும் ஒரு போட்டி உள்ளது. இதன் காரணமாக அவற்றில் ஒன்று நிச்சயமாக 14 புள்ளிகளை எட்டி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்கும். 


ஹாட்ரிக் வெற்றியுடன் களமிறங்கும் ஆர்சிபி: 


ஐபிஎல் 2024 தொடங்கப்பட்டபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், அதன்பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி படை கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை அந்த அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கடந்த 3 ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஒரு முறையும், குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறையும் தோற்கடித்துள்ளது.


வெளியேறிய மும்பை அணி:


 ஐபிஎல் 2024 தற்போதைய சீசனில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது, இதன் காரணமாக அந்த அணி தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளைப் பெற முடியும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால், லக்னோவின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பாதிக்கலாம். எது எப்படியோ! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று மற்றொரு பெயர் மும்பையுடன் இணையும், பிளே ஆஃப் வாய்ப்புக்கான பட்டியலில் இருந்து வெளியேறும்.