செல்வராகவன் இயக்கி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2 ஆம் பாகம் உருவாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. z


ரசிகர்களை கவர்ந்த 7ஜி ரெயின்போ காலனி


கடந்த 2004 ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரின்  நடிப்பில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். காதல் கொண்டேன் படத்தின் வெற்றிக்குப் பிறகு செல்வா இயக்கிய இப்படம் அவரை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் கொண்டு சேர்த்தது. 


ரவி கிருஷ்ணா -சோனியா அகர்வால் காட்சிகள், ரவி கிருஷ்ணா கிரிக்கெட் விளையாடும் காட்சி, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலை குரூப்பாக பாடும் காட்சி, மகன் வேலையில் நினைத்து கண்கலங்கி பெருமைப்படும் தந்தை என அனைத்தும் 20 ஆண்டுகளை கடந்தும் இன்றைக்கும் சமூக வலைத்தளத்தில் மீம் மெட்டிரியல் ஆகவும், ஸ்டேட்டஸ் கன்டென்ட் ஆகவும் வலம் வருகின்றது. அதேசமயம் செல்வா - யுவன் - நா. முத்துக்குமார் காம்போவில் உருவான இப்படத்தின் பாடல்கள் எல்லாம் ஜெம் ரகம் என்றே சொல்லலாம். 


மகிழ்ச்சியில் ரசிகர்கள் 


ஏற்கனவே செல்வராகவனிடம் புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2 ஆம் பாகம் அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிருஷ்ணாவே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தீவிரமாக உடல் எடையை குறைப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். 


அதேசமயம் ரவிகிருஷ்ணா கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் நடிக்கவேயில்லை. இப்படியான நிலையில் முதல் பாகத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், யுவன் தான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


அதேசமயம் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னால் அவரை செல்வராகவன் காதல் திருமணம் செய்துக் கொண்டு,பின் விவாகரத்து செய்தார். இதனால் இப்படத்தில் சோனியா அகர்வால் நடிப்பாரா? அல்லது ஹீரோயினாக வேறு யாரும் நடிப்பார்களா? என்ற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 


ஆனால் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் நடித்த அனிதா கேரக்டர் இறப்பது போல காட்டப்பட்டதால், கண்டிப்பாக கதிரின் (ரவி கிருஷ்ணா) வாழ்க்கையில் மற்றொரு பரிணாமமாக இந்த பாகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.