நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் அதிகளவில் கேரளாவில் ரிலீசாவதை கண்டித்து, மற்றொரு ஜெயிலர் படத்தின் இயக்குநர் சாக்கிர் மடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெயிலர் vs ஜெயிலர் 


முன்னெல்லாம் ஒரு தலைப்பை வேண்டுமென்று இரண்டு மூன்று பட நிறுவனங்கள் சண்டைக்குச்  செல்வதை கண்டிப்போம். இதுதொடர்பாக நீதிமன்றம் சென்ற வரை கதை கூட இருக்கு. ஆனால் ஒரே தலைப்பில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாவது ரசிகர்களுக்கு புதிதாகவே தோன்றுகிறது. இதிலும் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. 


 சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


இப்படியான நிலையில் மலையாள திரையுலகில் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன் தியான் சீனிவாசன் நடித்துள்ள படத்திற்கும் `ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்கிர் மடத்தில் இயக்கியுள்ள இப்படமானது 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ஒருவரை கொல்லத் துடிக்கும் கிரிமினல்களைப் பற்றிய கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தலைப்பை மாற்ற கோரிக்கை 


இதனிடையே பெரிய ஹீரோவான ரஜினி படம் ஜெயிலர் என்ற பெயரில் வெளியானால், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள எங்களுடைய ஜெயிலர் படம் அடிவாங்கும் எனவும், மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் இயக்குநர் சாக்கிர் மடத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. வீடு, மகள்களின் நகைகளை அடமானம் வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினி இந்த விவகாரத்தில் உதவ வேண்டும் எனவும் சாக்கிர் மடத்தில் கூறியிருந்தார். 


தர்ணா போராட்டம் நடத்திய இயக்குநர் 


இந்நிலையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு  கேரளாவில் அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எர்ணாகுளத்தில் உள்ள கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள் என்ற பதாகையையும் ஏந்தி கோஷமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.,