ஜெயிலர் பட தலைப்பு பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நிலையை புரிந்து கொள்வார் என தான் நம்புவதாக ஜெயிலர் படத்தின் இயக்குநர் சக்கிர் மடத்தில் தெரிவித்துள்ளார். 


ஜெயிலர் பட தலைப்பில் பிரச்சினை


ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் என்னும் பெயரில் 2 படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை தமிழ் சினிமாவில் அல்ல, மலையாள சினிமா உலகில் எழுந்துள்ளது. 



  • ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

  • பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மகன் தியான் சீனிவாசன் நடித்துள்ள படத்திற்கும் `ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்கிர் மடத்தில் இயக்கியுள்ள இப்படம் 1957 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ஒருவரை கொல்லத் துடிக்கும் கிரிமினல்களைப் பற்றிய கதை இதுவாகும். 


இதனிடையே கேரளாவில் மட்டும் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என மலையாள ஜெயிலர் படக்குழு கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்களின் கோரிக்கையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் சக்கிர் மடத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் ரஜினி தன்னுடைய நிலையை புரிந்து கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


அதே நாள்.. அதே நிகழ்ச்சி 


என்னுடைய ஜெயிலர் பட தலைப்பு 2021 ஆம் ஆண்டு, ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பு 2022 ஆம் ஆண்டும் பதிவு செய்யப்பட்டது. தமிழில் ஜெயிலர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்த போது  எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.


5 மாதங்களுக்கு முன் நான் ஒரு பிரதிநிதியை அனுப்பி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு கடிதம் எழுதினேன். நான் ஒட்டுமொத்தமாக் ஜெயிலர் பட தலைப்பை மாற்ற வேண்டும் என சொல்லவில்லை. கேரளாவில் மட்டும் மாற்றி வெளியிடும்படி கேட்டுக் கொண்டேன். 


என்னுடைய ஜெயிலர் படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. எங்கள் படம் கேரளாவில் மட்டும் தான் வெளியாகிறது. ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு எல்லோரும் அவரின் படம் பார்க்க தான் செல்வார்கள். இந்த பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் தான் படத்தை தயாரித்து இயக்குகிறேன். இதற்காக என் மகள்களின் நகைகள், வீடு உள்ளிட்டவற்றை அடமானம் வைத்துள்ளேன். வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். 


முதலில் செப்டம்பரில் தான் படம் வெளியாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் ரஜினி படம் வந்தால் நம் படத்துக்கு யார் வருவார்கள் என விநியோகஸ்தர்கள் கேள்வி எழுப்பினர். இது நியாயமான ஒன்று தான். அதனால் தான் ஜெயிலர் படம் இசை வெளியீடு, ரிலீஸ் தேதி அன்றே எனது ஜெயிலர் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளேன். எனது எதிர்காலமே இதில் தான் அடங்கியுள்ளது, சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 


ரஜினி மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்பவர். என்னுடைய நிலைமையையும் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்” என சாக்கிர் மடத்தில் தெரிவித்துள்ளார்.