விலங்கு சரணாலயமாக மாறும் தமிழ் சினிமா


முன்பெல்லாம் படங்களுக்கு தான் விலங்குகளின் பெயர்கள் வைப்பார்கள். இப்போது எல்லாம் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படுகிறது. காக்கா, கழுகு, அணில், ஆமை என ஒவ்வொரு  நடிகருக்கும் ஒரு பட்டப் பெயர் இணையதளத்தில் புழக்கத்தில் இருக்கிறது.


பெரும்பாலான பிரபலங்கள் மேடைகளில் அமைதியாக இருப்பதற்கு காரணம் அவர்களின் குணம் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இந்தப் பிரபலங்கள் பேசும் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மனதில் இருக்கும் பழமைவாத சிந்தனைகளும் சாதியப் பார்வைகளுமே அதிகம் வெளிப்படுகின்றன. சமூக எதார்த்தத்தைப் பற்றிய போதுமான புரிதல் இல்லாததே இதற்கு காரணம். இன்று புகழ்பெற்ற நடிகர்களாக இருக்கும் ஸ்டார்களின் பழைய வீடியோக்களை எடுத்துப் பார்த்தால் இது புரியும். 


ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள், பிரபலங்கள் ஏன்?


 தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக ரசிகர்களிடையே மோதல்கள் எல்லா காலமும் இருந்துதான் வருகிறது. சினிமா மக்களின் வாழ்க்கையில் அவ்வளவு நெருக்கமான அங்கமாக இருப்பதே இதற்கு காரணம். சினிமாவையும் சினிமாவின் நடிக்கும் நடிகர்களையும் மற்ற எந்த ஒரு சராசரி மனிதனாகவும் கருதி அவர்களின் படைப்புகளுக்காக அவர்களை பாராட்டுவது போதுமானது. இந்தப் புரிதலை சினிமாத் துறையில் இருப்பவர்கள் மக்களுக்கு இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. காரணம் ரசிகர்களை வைத்தே இங்கு உலகத்தின் மிகப்பெரிய வணிகமான சினிமா நடைபெறுகிறது. 


ரசிகர்களைத் தூண்டிவிடும் போக்கு


இன்றைய இயக்குநர்கள் சினிமா துறையில் இருக்கும் பொதுபிம்பங்களை உடைக்க முயற்சிப்பது ஒரு நல்ல நகர்வாக பார்க்கப்படுகிறது. தியாகராஜா குமாரராஜா, ராம், ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டவர்கள் இதனை கடைபிடிக்க முயற்சிக்கிறார்கள்.


அதே தலைமுறையைச் சேர்ந்தவர் தான் ‘மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமார். லியோ வெற்றிவிழாவில் ரஜினியை தாக்கும் வகையில் அவர் பேசியது ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த ரசிகர்களை மேலும் கிளர்ச்சியடைச் செய்துள்ளது. அதே போல் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டின் போது சன் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனும் ரசிகர்களின் மோதலைத் தூண்டிவிடும் வகையில் பேசியதும் விமர்சனத்திற்குரியது. 


தெளிவுடன் பேசிய விஜய்


லியோ இசைவெளியீட்டைப் பொறுத்தவரை நடிகர் விஜய் மிகத் தெளிவாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் வெளிப்படுத்தும் கோபம், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் ஆசைப்படவில்லை என அவர் பேசியதில் இருந்து தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த மாதிரியான வீண் மோதல்களில் இருந்து விலகி இருக்கவே அறிவுறுத்தி இருக்கிறார்.


அதே போல் ஜெயிலர் படத்தில் ‘அலப்பறை கெளப்புறோம்’ பாடலில் இருந்து சூப்பர் ஸ்டார் என்கிற வரியை மட்டும் நீக்கும்படி ரஜினி கேட்டுக் கொண்டிருக்கிறார். மூத்த நடிகர்கள் தங்களை இப்படியான சர்ச்சைகளில் இருந்து விலகி வைத்திருக்க, அவர்களின் ரசிகர்கள் என்கிற பெயரில் திரைத்துறையில் இருக்கும் ஒரு சிலரின் நடத்தைகள் விமர்சிக்கப்படுவது ஏற்கத்தக்கதே.


தலைவர் 171


லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தப் படமான தலைவர் 171 படத்திற்கு தயாராகி வருகிறார். மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுதிய ரத்னகுமார், தலைவர் 171 படத்திற்கு திரைக்கதை எழுத இருக்கிறாரா?


சினிமா தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பராக இருக்கும் ரத்னகுமார் இன்னும் சற்று ஃபேன்பாயாக இருக்கலாம்.. ஆனால் அவர் இன்னும் சற்று பொறுப்புணர்ச்சியோடு நடந்திருக்க வேண்டும் என்பதே அவரை விமர்சிக்கும் நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது!