80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் ஜெயதேவி. 1976ம் ஆண்டு தனது 20வது வயதில் தமிழ் சினிமாவில் இதய மலர் படத்தின் மூலம் அறிமுகமானார். நாடக கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஜெயதேவி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், ரஜினியுடன் இணைந்து காயத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


நடிகர், இயக்குனர்:


சினிமாவில் நடிகையாக இருந்தாலும் ஒரு இயக்குநர் ஆக வேண்டும் என்பதே ஜெயதேவியின் கனவாக இருந்துள்ளது.  அதற்காக விடாமுயற்சியாக போராட்டிய ஜெயதேவி புரட்சிக்காரன், சரியான ஜோடி, பாசம் ஒரு வேஷம், விலங்கு, விலங்கு மீன், பெண்களின் சக்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுடன், 15 படங்களை இயக்கியுள்ளார். 


ஜெயதேவி 2000வது ஆண்டில் புரட்சிக்காரன் என்ற படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேலு பிரபாகருடன் காதலில் விழுந்தார். திருமணம் செய்து கொண்ட இருவரும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர், தனிமையில் வசித்து வந்த ஜெயதேவி, தனக்கு குழந்தைகள் இல்லாததால் நேதாஜி என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 


உயிரிழப்பு:


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடலநல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயதேவி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டார். எனினும், சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக ஆறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனராக இருந்து படங்களையும் தயாரித்து, காதலில் விழுந்து கடைசி வரை தனிமையில் வாந்த ஜெயதேவிக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். 


மறைந்த ஜெயதேவி தான் கடந்து வந்த வாழ்க்கையை ஊடகம் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், ”14 வயதிலேயே நடன பயிற்சி எடுத்துள்ளேன். குழந்தை பருவத்திலேயே தந்தையை இழந்ததால், சகோதரர், சகோதரிகள் என குடும்பத்தை தாங்கும் பொறுப்பு என்மேல் விழுந்தது. 40 படங்களில் நடித்துள்ளேன்.


சரிதா, மோகன் நடித்த நலம் நலமறிய ஆவல் என்ற படத்தை முதல் முதலாக இயக்கினேன். வேலு பிரபாகர் கேமரா மேனாக வந்து வாய்ப்பு கேட்ட போது, தான் ஒரு தயாரிப்பாளராக இருந்தேன். அவரே படத்தில் வேலை பார்க்க என்னிடம் வாய்ப்பு கேட்டதால் வேலு பிரபாகரனின் அறிமுகம் கிடைத்தது. ஷூட்டிங் நடந்தபோதே எங்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 


திருமண வாழ்க்கை:


இருவரும் பழகி பேசனதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என முடிவெடுத்தேன். பின்னர், இந்திய அளவில் பேசப்பட்ட த்ரில்லர் படமான விலாங்கு மீன் படத்தை இயக்கினேன். என்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக வேலு பிரபாகரன் வேலை செய்ததால், அவரை இயக்குநராக மாற்ற விரும்பினேன். அவருக்கு ஒரு கதை சொல்லி இயக்க செய்தேன். அதன்படி, நாளைய மனிதன் படத்தை வேலுபிரபாகரன் எடுத்தார். நான் பின்னணியில் இருந்து உதவினேன். நானும் வேலு பிரபாகரனும் எளிமையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டோம்.


இருவரும் 20 ஆண்டுகளாக திருமண வாழ்வில் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தோம். திருமணத்திற்கு பிறகும் இருவரும் எங்கள் பணியில் சரியாக செய்து வந்தோம். மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிய முடிவெடுத்தோம்” என்றார்.