'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் லெஜெண்ட்களான ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இருவரும் திரைப்பட தயாரிப்பு பணிகளில் மூழ்கியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.



கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்  இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவான திரைப்படம். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகி உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கல்கியின் ப்ரியர்களும் இந்தப் படத்தை கொண்டாடினர். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ஜெயராம் என மிக பெரிய திரை பட்டாளமே ஒன்று திரண்டு நடித்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். 



பொன்னியின் செல்வன் -2 -இன் முதல் பாடலான ’அகநக அகநக முக நகயே’ பாடல் வெளியாகியிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குந்தவையின் காதலை சொல்லும் இந்த பாடலால ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இளங்கோ கிருஷ்ணன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.சக்திஸ்ரீ கோபாலன் பாடலை பாடியிருக்கிறார். கார்த்தி கண்கள் கட்டப்பட்ட நிலையில், த்ரிஷா கையில் கத்தியுடன் இருக்கும் வகையிலான போஸ்டர் அறிவிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்போது லண்டல் ஸ்டூடியோவில் பின்னணி இசை தயாரிப்பு நடைபெறும் இடத்தில் இருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையில் ஏப்ரல் 28- ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இச்சூழலில் பட ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில்,  அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


பொன்னியின் செல்வன் - 2 இசை வெளியீட்டு விழா


இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எவர்க்ரீன் நடிகை, உலக அழகியாக கொண்டாடப்பட்டவர் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமனாரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்தன. அனைவரின் ப்ளே லிஸ்டிலும் ரிப்பீட் மோட்-ல் வைத்து கேட்க வைத்தது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அழகான கதை, இசை என படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 ட்ரெய்லர் வெளியீடு எப்போது என ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஸ்டூடியோவில் இசைக்கான பணிகளில் உள்ள புகைப்படம் ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது.