காசோலை  வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ரன்,சண்டகோழி,வேட்டை,பீமா, பையா, அஞ்சான், வாரியர்ஸ் என பல படங்களை இயக்கி சிறந்த கமர்ஷியல் இயக்குநர் என்ற பெயரைப் பெற்றார். அதேசமயம் “திருப்பதி பிரதர்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தீபாவளி, பட்டாளம்,பையா,கும்கி, வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களை சொந்தமாகவும், பிற நிறுவனங்களுடன் இணைந்தும் தயாரித்தார். 


இப்படியான நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக  ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.1.3 கோடி தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றுள்ளனர். 


கடன்தொகையை உரிய காலத்தில் திரும்பச் செலுத்ததாத நிலையில் இவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலைகள் கொடுத்தார். ஆனால் காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி  தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 


இதனிடையே இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், அதன் நிர்வாகிகளான இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது,  காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்,தற்போது மேலும் 20 சதவீதத்தை டிபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டிபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.