இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் ஜோஷ்வா- இமை போல் காக்க படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். மாதவன், கமல்ஹாசன், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம்  இயக்கியுள்ள அவர் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர் என அழைக்கப்படுகிறார். இவரின் படங்களில் இடம்பெறும் காதல் காட்சிகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அதேசமயம் தன்னுடைய ஐகானிக் காட்சிகள் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டுள்ளா.ர் 


இப்படியான நிலையில் கௌதம் மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் முழுநேர நடிகராக மாறிப்போனார். படம் எடுத்து கடன் ஏற்பட்டதால் அதனை ஈடுகட்டும் வகையில் படங்களில் நடித்து வந்ததாக தெரிவித்தார். கடைசியாக விஜய் நடித்த லியோ படத்தில் நடித்த கௌதம் மேனன் இனிமேல் நடிப்பதை விட்டுவிட்டு படம் இயக்கும் பணியில் மட்டும் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். 


அப்படியாக அவரின் இயக்கத்தில் இரண்டு படங்கள் முடிக்கப்பட்டு வெளியாகாமல் உள்ளது. இதில் ஒன்று விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இன்னும் வெளியாகாமல் உள்ளது. 






அதேபோல் “ஜோஸ்வா இமைபோல் காக்க” படமும் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் ஐசரி கணேஷின் மருமகன் ஆவார். இந்த படத்தில் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கார்த்திக் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆண்டனி எடிட்டிங் பணியையும், எஸ்.ஆர்.கார்த்திக் ஒளிப்பதிவும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். 


இந்நிலையில் “ஜோஸ்வா இமைபோல் காக்க” படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ இந்த படம் ரிலீசாகி கௌதம் மேனன் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.