தான் சினிமாவுக்கு வந்த கதை குறித்து இயக்குநர் சேரன் சுவாரஸ்ய பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த ஃப்ளாஷ்பேக் பேட்டி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


முதல் படமான பாரதி கண்ணமா  மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சேரன். அவர் சினிமாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமாக இருக்கிறது அவருடைய படங்கள் போலவே!


அவர் அளித்த பேட்டி:


என் அப்பா சினிமா ஆப்பரேட்டர். அதுதான் சினிமாவுக்கும் எனக்குமான முதல் தொடர்பு. சினிமாவில் சிவாஜியை பார்த்து எனக்கு நடிப்பில் ஆர்வம் வந்தது. அதுதான் விதை. அந்த விதையைக் கொண்டு சென்னை வந்த எனக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக அமையவில்லை. நடிகனாகும் ஆசையில் வந்தேன். ஆனால் அதற்கான தோற்றம் இல்லை. சரிதான் என்று இயக்குநர் கனவுடன் பட கம்பெனிகளுக்கு நடயாய் நடந்தேன். ஆபீஸ் பாய் ஆனேன், மேனேஜர் ஆனேன், ரவிக்குமார் சாரிடம் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆனேன். அப்படியே தொழில் கற்றுக் கொண்டேன். நாட்டாமை படத்தில் முழுசாக 8000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். எனக்கு ரவிக்குமார் சார் செய்த மாதிரி யாருமே உதவி செய்திருக்க முடியாது.


அறியாமையால் கமல் சார் படத்திலிருந்து வெளியேறினேன்:


கமல் சாரின் மகாநதி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். அந்தப் படத்தில் கோபித்துக் கொண்டு வெளியேறியது அறியாமை என்பதை இப்போது உணர்கிறேன். முதல் படம் பாரதி கண்ணம்மா ஸ்க்ரிப்ட் மட்டுமே ஒன்றரை வருடங்கள் தயார் செய்தேன். தங்கம் போல் மெருகேறிய அந்தக் கதை வெற்றிக் கதையானது. என் வாழ்வில் ஒளி வந்தது. அடுத்தடுத்த படங்களும் அடையாளமாக தங்கர் பச்சன் எனக்கு நடிகர் வாய்ப்பை தந்தார். சொல்ல மறந்த கதை படத்தில் நான் ஹீரோவாக அறிமுகமாகிறேன். அந்தப் படம் நன்றாக ஓடுகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆட்டோகிராஃப் படத்தை இயக்க ஆயத்தமானேன். எல்லா நடிகர்களையும் அணுகினேன். ஸ்ரீகாந்த் வரை பேசினேன். யாருமே அந்த கதையை செய்ய முன்வரவில்லை. விரக்தியில் நாமே ஏன் நடிக்கக் கூடாது என்று முயற்சித்து நடித்தேன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 




பார்த்திபன் சாருக்கு கோபம் இல்லை:
காதலை மிக வித்தியாசமான கோணத்தில் சொன்ன பாரதி கண்ணம்மா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சேரனுக்கும் பார்த்திபனுக்கும் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டதாக சேரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகி தியாகம் செய்வது போல கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கிளைமாக்ஸ் மிக வித்தியாசமாக இருந்ததாலேயே இந்த படத்தில் பார்த்திபன் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது தனக்கு பிடிக்கவில்லை என சட்டென்று மாற்ற சொன்னதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தகவல் உண்டு. இது குறித்து பேசிய சேரன், அந்த க்ளைமாக்ஸ் கோபம் இன்று வரை பார்த்திபன் சாருக்கு உண்டு. ஆனாலும் அவர் கோபம் நியாயமானதே என்று நான் பொறுத்துப் போவேன். மற்றபடி இப்பவும் என் மீது அக்கறையுடன் நடந்து கொள்பவர்களில் அவரும் ஒருவர் என்றார்.


ஆட்டோகிராஃப் பற்றி பேசிய சேரன் காதல் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும். காதல் ஒரே இடத்தில் புதைந்து போவதில்லை என்பது தான் ஆட்டோகிராஃப். அது காமம் அல்ல. நான் சொன்னது காதலின் அழகியல் என்றார். 


அடுத்ததாக தவமாய் தவமிருந்து, மாயக் கண்ணாடி என நானே நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் சொன்ன கதைகளில் மற்ற நடிகர்கள் நடிக்கத் தயாராக இல்லாத போது நானே நடிக்க வேண்டியதாகிறது. அப்படித்தான் தொடர்ந்து நடிக்கிறேன். என்னிடம் தனுஷ், சிவ கார்த்திகேயன் வைத்து எடுக்க கூட கதை இருக்கிறது. ஆனால், அவர்கள் பிஸியாக இருந்தால் நான் ட்ராவல் பண்ணாமல் இருக்க முடியாதல்லவா?” என்கிறார்.