2015-ஆம் ஆண்டு, மலையாள மொழிப்படம் பிரேமம்’ வெளியானது. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்பு, நேரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் எந்த திரைப்பட அறிவிப்பையும் வெளியிடவில்லை.



கடந்த ஆண்டில்தான் ‘பாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக தெரிவித்திருந்தார். பகத்ஃபாசில் இதில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், ஃபேஸ்புக் கமெண்டில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார். ரஜினியை வைத்து இயக்குவதற்காக கதை வைத்துள்ளீர்களே என அந்த ரசிகள் எழுப்பிய கேள்விக்கு, “பிரேமம் படத்திற்கு பிறகு ரஜினி சாரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், சந்திக்க முடியவில்லை. ஆம், ரஜினி சாருக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். என்னுடைய வேலையை நான் சரியாக செய்தால், கடவுள் மீதி வேலையை செய்துவிடுவார். இன்னொரு நாள், நிச்சயமாக ரஜினி சாரை சந்திக்க செல்வேன். இப்போது கடவுளும் கொரோனாவை அழிப்பதில் பிஸியாக இருப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.