ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மிகவும் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி அவரின் நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த படம் தான் 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், மு.க.தமிழரசு தயாரிப்பில் அருள்நிதி, ரமேஷ் திலக், சிங்கம்புலி, எம்.எஸ். பாஸ்கர், சனந்த் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி'. அப்படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது மிகவும் மிரட்டலாக உருவாகி வருகிறது. படு மாஸான விஷுவல் எஃபெக்ட்களுடன் கூடிய இந்த ஹாரர் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. 

 

 


 

தற்போது உருவாகியுள்ள 'டிமான்டி காலனி 2' படத்தையும் அஜய் ஞானமுத்துவே இயக்க அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இன்று 'டிமான்டி காலனி 2' படத்தின் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'நொடிகளே...' பாடல் இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி தற்போது 'நொடிகளே...' பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை சாம்.சிஎஸ் மற்றும் ஐக்கி பெர்ரி பாடியுள்ளனர். 

 

 





 

'டிமான்டி காலனி 2' காலனி படம் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ம் தேதி விக்ரமின் தங்கலான் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் களத்தில் இறங்குகின்றன என்பதால் இந்த சுதந்திர தின ஸ்பெஷல் படங்களின் ரிலீஸ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.