தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர்கள் கார்த்தி, விஷால் மற்றும் நாசருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர்கள் கார்த்தி, விஷால் மற்றும் நாசர் ஆகியோருக்கு, துணை நடிகராக உள்ள ராஜதுரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 




சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் தென்னிந்திய சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக  துணை நடிகர் ராஜதுரை உள்ளார். 


 






அவர் சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ் அப் குழுவில், சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. ஆகவே பகிரங்கமாக  மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூகவலைதளங்களில் பரவி வரும் வாட்ஸ அப் குரல் பதிவை நீக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தென்னிந்திய நடிகர் சங்கம் மேலாளர் அளித்த  புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் அவதூறு வாட்ஸ் அப் குரல் பதிவை வைத்து துணைநடிகர் ராஜதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.