நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி காலமானதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


 






நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உடல்நல குறைவால் காலமானார்.


87 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார். இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 7 குழந்தைகள்.  


இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 3 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.