மறைந்த தனது கணவர் சீரஞ்சிவி சர்ஜா பிறந்தநாளில் நடிகை மேக்னா ராஜ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழில் காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர்திரு 420 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். நட்சத்திர தம்பதியான சுந்தர்- பிரமிளாவின் மகளான  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். 


அவரது மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மேக்னாவுக்கு ஆறுதலாக இருந்து ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  மகனுக்கு ராயன் ராஜ் சர்ஜா  என பெயரிட்டு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் மேக்னா. பலரும் அவரை 2வது திருமணம் செய்ய சொல்லி அறிவுறுத்திய நிலையில், தான் என் கணவர் சொல்வதை போல இந்த தருணத்தை வாழ நினைக்கிறேன். அதனால் அப்படியான ஒரு நாளை நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். 






திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மேக்னா ராஜ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பிலிம்பேர் விருதில் சிறந்த நடிகைக்கான விருதை மேக்னா பெற்றார். பின் அந்த விருதுடன் கணவரின் புகைப்படம் அருகில் நின்று இப்போதும் கூட நம்மைச் சுற்றி அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றன என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவின் பிறந்தநாளான இன்று அவருடனான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள மேக்னா ராஜ், அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எதுவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி...நான் சிரிக்க காரணம் நீங்கள் மட்டுமே.  என் அன்பு கணவர் சிரு.... நான் உன்னை நேசிக்கிறேன்! என தெரிவித்துள்ளார். மறைந்த கணவருக்காக மேக்னா ராஜின் பிறந்தநாள் வாழ்த்து ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.