தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலமாகவே தனக்கான ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்தவர் பட்டிமன்றம் ராஜா. மேடையில் நறுக் கருத்துகளை இயல்பான நகைச்சுவை தொனியுடன் சொல்பவர்.இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் நடிகர் ஸ்ரேயாவுக்குத் தந்தை கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். 



அண்மையில் இயக்குநர் மற்றும் நடிகருமான சித்ரா லட்சுமணனின் ச்சாய் வித் சித்ரா என்கிற நிகழ்ச்சியில் தனது நடிப்பு அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொண்டார் அவர். அதில்,”முதல் நாள் வண்டியில் கூட்டிக் கொண்டு போய் ஷூட்டிங் ஸ்பாட்டில் விட்டுட்டாங்க. அதன்பிறகு அங்கே இருந்த கேரவனில் மேக் அப் செய்துகொள்ள அனுப்பினார்கள். வாழ்க்கையில் பாண்ட்ஸ் பவுடர் தவிர எதுவுமே போடாத நான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப் போனேன். எனக்கு மேக்கப் போட்டவர் சுஜாதா, கே.ஆர்.விஜயா இப்படிப் பல பேருக்கு மேக்கப் போட்டதா சொல்லிட்டு என்னை பாவமாகப் பார்த்தார். வயசானவங்கனா எனக்கு நரைச்ச முடி விக்கெல்லாம் வைக்கனுமேனு கேட்டேன். இல்லை, இப்படி பாக்கவே நீங்க அப்பா மாதிரிதான் இருக்கிங்க. இதுவே போதும் என்றார். அதையெல்லாம் விடப் பெரிய நகைச்சுவை காஸ்ட்யூம் முடிவெடுப்பதில்தான் வந்தது. வந்தவர் என்னிடம் ஒரு வேட்டி பனியனைக் கொடுத்து விட்டுச் சென்றார். காஸ்ட்யூம் எங்கப்பா எனக் கேட்டேன். இதான் சார் காஸ்ட்யூம் என்றார். அப்பா கேரக்டருக்கு ஒரு சட்டை கூடக் கிடையாதா என ஒரு மாதிரி குழம்பிப் போனேன். கேரவன் இருந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு 250 மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.


பனியனை மாட்டிக்கொண்டு கேரவனில் இருந்து நடந்து போறேன். நம்மை பட்டிமன்றத்தில் பார்த்த சிலர், ‘இது பட்டிமன்றம் ராஜாதானே இவர் என்ன பனியனோட இங்க சுத்திட்டு இருக்காரு’ எனக் கேட்கவும் நமக்கு ஒரு மாதிரி சங்கடமாகிவிட்டது.ஸ்பாட்டுக்கு போனதும் கே.வி.ஆனந்த சார் மேலே பாருங்கனு முதல் ஷாட்டுக்கு சொன்னதும் நான் எங்க பார்க்குறதுனு தெரியாம மேலே நிலாவைப் பார்த்தேன். அப்படிதான் என்னுடைய முதல் படத்தின் முதல் ஷாட் தொடங்கியது.ஆனந்த் அதன் பிறகும் கூட அதைப் பற்றி நகைச்சுவையா நிறைய முறை சொல்லியிருக்கார். இப்படித்தான் எனது முதல் திரைப்பட அனுபவம் இருந்தது” என்றார்.


சித்ரா லட்சுமணனின் வேறு சில சுவாரசியமான நேர்காணல்களைக் காண: