விலகிய கமல்..


பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகவுள்ளார். 


இது குறித்தான அறிக்கையை கமலே வெளியிட்டார். “பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது” என்று குறிப்பிட்டார். 






 


வனிதா சொன்ன கதை..


இதற்கிடையே பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வனிதா வெளியேறியுள்ளார். வெளியே வந்த வனிதா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் கமல்ஹாசன் விலகியது குறித்தும் பேசியுள்ளார். அதில்,'' கமல்ஹாசனுக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும். விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே அவர்தான். அவரால் நேரம் ஒதுக்க முடியாதா? அதற்குள் ஏன் விலகினார். பிக்பாஸ் 6க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரு கிளம்பியதற்கு வேறு காரணம் இருக்கிறது. நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது. அதனால்தான் அவர் கிளம்பிவிட்டார். நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்வதை நாங்களே உணர்ந்தோம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே அதனை பேசிக்கொண்டோம். இந்த நிகழ்ச்சி செல்லும் விதமே சரியில்லை. நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் வெளியேறிவிட்டேன்" என்றார். 


முன்னதாக கமல் விலகியதுக்கு ஹாட்ஸ்டார் அழுத்தமும் காரணம் எனக் கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரின் தயாரிப்பு என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அதேபோல் கமல் தயாரிக்கும் விக்ரம் படத்தையும் ஹாஸ் ஸ்டார்தான் அதிக விலைக்கு கொடுத்து வாங்க உள்ளதாம். அதற்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் படத்தை தாமதம் செய்யாமல் உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கமலுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால்தான் உடனடியாக கமல் படம் பக்கம் கவனத்தை திருப்பியதாகவும் தகவல் வெளியானது.