`சர்வைவர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழில் பல பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக இந்த நிகழ்ச்சி கருதப்பட்டு வரும் சூழலில், `சர்வைவர்’ போட்டியாளர் ஒருவர் நேற்றைய நிகழ்ச்சியில் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜீ தொலைக்காட்சியின் `சர்வைவர்’ நிகழ்ச்சி கடந்த 12 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆப்பிரிக்காவின் தன்சானியா நாட்டில் ஜான்ஸிபார் தீவுகளில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டு, இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். `காடர்கள்’, `வேடர்கள்’ எனப் பிரிக்கப்பட்டிருக்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளையும், அணிகளுக்குள் நிகழும் சிக்கல்களையும் தீர்த்து வைக்கவும், நிகழ்ச்சியைத் தொகுக்கவும் நடிகர் அர்ஜுன் சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சி மூலம் களமிறங்கி உள்ளார். 


`காடர்கள்’ அணியின் தலைவராகத் தற்போது விஜயலக்‌ஷ்மி இருக்கிறார். அவரது அணியில் விக்ராந்த், லேடி கேஷ், உமாபதி ராமையா, ராம்.சி, சரண் ஆகியோர் உள்ளனர். அம்ஜத் கான் தலைவராக இருக்கும் `வேடர்கள்’ அணியில் நந்தா, லட்சுமி பிரியா, ஐஷ்வர்யா, பெசண்ட் ரவி, லக்கி நாராயணன், விஜே பார்வதி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். தொடக்கம் முதலே, `வேடர்கள்’ அணியில் பார்வதிக்கும் பிற போட்டியாளர்களுக்கும் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வந்தன. 



12வது நாள் ஒளிபரப்பப்பட்ட `சர்வைவர்’ நிகழ்ச்சியில், நள்ளிரவில் பார்வதியும், ஐஷ்வர்யாவும் நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தொடங்கிய உரையாடலைச் சண்டையில் முடித்ததாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பார்வதி - ஐஷ்வர்யா சண்டை குறித்து போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அப்போது `வேடர்கள்’ அணியின் தலைவர் அம்ஜத் கான், பார்வதியின் நடவடிக்கைகளைக் குறித்துப் பேசிய போது, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். 


சக போட்டியாளர்கள் பெசண்ட் ரவி, நந்தா, லக்கி நாராயணன் ஆகியோருடன் இரவு நடந்த சண்டை குறித்துப் பேசிய அம்ஜத் கான், `அவங்க என்ன நினைச்சிருக்காங்கன்னா.. காலைல 8 மணிக்குப் பாட்டு போடுவாங்க; ஆடி முடிச்சிட்டு, பாத்திரம் கழுவிட்டு, சமைச்சிட்டு, பாத்ரூம் கழுவிட்டு, ஜாலியா ஏ.சி ரூம்ல உக்கார்ந்துட்டு gossip பண்ணலாம்னு நெனச்சிட்டு வந்திருக்காங்க.. இங்க வந்து பார்த்தா, சிஸ்டமே வேற மாதிரி இருக்கு..’ என்று மற்றொரு போட்டியாளரான பார்வதியை விமர்சிக்கும் போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.



`சர்வைவர்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர், மற்றொரு பெரிய ரியாலிட்டி ஷோவான `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் போட்டியிலேயே விமர்சனம் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.