விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலே அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.


எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் சேதுபதி:


இதுவரை தமிழில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன் பல சர்ச்சைகளுடன் சுவாரஸ்யமற்றதாக அமைந்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


இந்த நிலையில், இந்த முறை முற்றிலும் கலவையான புதிய போட்டியாளர்களுடன் புதிய தொகுப்பாளருடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, போட்டியாளர்களை காட்டிலும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி எப்படி இவர்களை கையாளப் போகிறார்? என்றே ரசிகர்கள் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

ரசிகர்களின் பாராட்டைப்பெற்ற விஜய் சேதுபதி:


இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8-ன் முதல் நாளான நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாண்ட விதம் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருடன் இயல்பான பேச்சு வழக்கு, அவர் போட்டியாளர்களுடன் பேசிய விதம், போட்டியாளர்களை ஊக்குவித்த விதம், சில போட்டியாளர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக, நடிகர் அர்னவ் மற்றும் நடிகர் ரஞ்சித்தை அவர் அணுகிய விதம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கமல்ஹாசன் போட்டியாளர்களை கையாளும் விதமும், ரசிகர்களிடம் பேசும் விதமும் அவருக்கு உரிய பாணியில் இருக்கும். ஆனால், விஜய் சேதுபதியின் அணுகுமுறையும், அவரது பேச்சு வழக்கும் மிக எளிய உரைநடையில் இருப்பதால் மிக எளிதாக ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இருந்ததும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் நிகழ்ச்சித் தொகுப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 போட்டியாளர்கள்:


பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை சச்சனா நமிதாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகர் டி.எஸ்.கே., தொகுப்பாளர் தீபக், ஆர்.ஜே. ஆனந்தி, நடிகை சுனிதா கோகோய், கானா பாடகர் ஜெஃப்ரி, நடிகர் ரஞ்சித், நடிகை பவித்ரா ஜனனி, நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், நடிகர் அருண் பிரசாத், நடிகை தர்ஷிகா, நடிகர் விஜே விஷால், நடிகை அன்ஷிதா, நடிகர் அர்னவ், தொகுப்பாளர் முத்துக்குமரன், தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.


மாறுபட்ட குணாதிசயம் கொண்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த பிக்பாஸ் சீசன் எப்படி 100 நாட்கள் நகரப்போகிறது? என்றும், முதல் நாளான நேற்று போலவே விஜய் சேதுபதி அடுத்தடுத்த நாட்களும் கையாள்வாரா? என்றும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.