பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் இன்றைய எபிசோடில் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil 7) அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இன்று 93ஆவது நாள் தொடர்ந்து வருகிறது. சென்ற வாரம் எதிர்பாராதவிதமாக டபுள் எவிக்‌ஷனாக ரவீணா மற்றும் நிக்சன் வெளியேறினர்.


இந்நிலையில், தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ் என 8 போட்டியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 8 போட்டியாளர்கள் இறுதி வாரத்துக்கு முந்தைய வாரத்தில் தொடர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் இன்றைய எபிசோடில் தொடங்கி உள்ளது. இதில் 8 போட்டியாளர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம். போட்டியாளர்கள் எடுக்காமல் தவிர்க்க தவிர்க்க பணத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். 


 ஒரு லட்சம் ரூபாய் உடன் இந்த பணப்பெட்டி தற்போது பிக்பாஸ் வீட்டின் மத்தியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “கூட ஒரு சைஃபர் வந்ததும் எடுக்கறத பத்தி யோசிக்கலாம்” என தினேஷ் பளிச் கமெண்ட் வீசுகிறார். தொடர்ந்து மாயாவும் ஜாலி ரியாக்‌ஷன் கொடுக்க, “ஒழுங்கா பணப்பெட்டிய எடுத்துட்டு யாராவது கிளம்புங்க” என விசித்ரா கூறுகிறார்.


அதற்கு பதிலளிக்கும் தினேஷ் “அதெல்லாம் இந்த சீசனில் யாரும் எடுக்க மாட்டாங்க.. நீங்க வேணா பாருங்க” என்கிறார்.



விஷ்ணு டிக்கெட் டு ஃபினாலே வென்று ஏற்கெனவே ஃபைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மாயா தான் பணப்பெட்டியை எடுக்கப்போவதாக தெரிவித்தார். மற்றொருபுறம் தினேஷிடம் மாயா விசித்ரா வெளியேற ரெடியாக இருப்பதாகத் தெரிவித்தார்.


இந்நிலையில், ரவீனா வெளியேறியதில் வருத்தத்தில் இருக்கும் மணி அல்லது மக்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என அதிருப்தியில் இருக்கும் பூர்ணிமா இருவரில் ஒருவர் வெளியேறலாம் என பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.