விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 7 சீசன்கள் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 8 நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.



தொடங்கிய பிக்பாஸ்:


100 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் விதவிதமான போட்டிகள், விதவிதமான விவாதங்கள் என பல கலவையாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கப்போகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.


விஜய் சேதுபதி இந்த சீசனை எப்படி தொகுத்து வழங்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் முதல் நாளான நேற்று விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் மிகவும் தொய்வாக சென்றதால், இந்த சீசனை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது.

முதல் நாளே எவிக்‌ஷன்:


இதன்படி, முதல் நாளான நேற்றே நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி  நேரத்திற்குள்ளாகவே முதல் போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. பிக்பாஸின் இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒருவர் பற்றி ஒருவர் அறிந்து கொள்ளாத சூழலில், அதற்குள் ஒருவரை ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேறுவதற்கான பெயராக அறிவிக்க வேண்டும் என்ற பிக்பாஸின் இந்த நிபந்தனையால் போட்டியாளர்களே ஸ்தம்பித்துள்ளனர்.


ஆனாலும், பிக்பாஸ் விதிப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒருவர் பெயரை வெளியேற்றும் போட்டியாளர்கள் பெயரில் கூறியுள்ளனர். சத்யா, ஜாக்குலின், ரவீந்திரன் என பல போட்டியாளர்கள் பெயர்கள் எவிக்‌ஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.


இவரா அவுட்?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாச்சனா, ரஞ்சித், தீபக், சுனிதா, ஆர்.ஜே. ஆனந்தி, ஜெஃப்ரே, முத்துக்குமரன், சௌந்தர்யா, அன்ஷிதா, ஜாக்குலின், சத்யா, விஜே விஷால் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


எவிக்‌ஷன் லிஸ்டில் இடம்பெற்ற சாச்சனா போட்டியின் முதல் நாளே வெளியேற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸின் இந்த விதிக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 2003ம் ஆண்டு பிறந்த சாச்சனாவிற்கு தற்போது 21 வயது ஆகிறது. இவர் மகாராஜா, ஆகஸ்ட் 16, 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு போட்டியும் நடத்தப்படாமல் போட்டியாளர் ஒருவரை பிக்பாஸ் வெளியேற்றியிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.