பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன்னை மரியாதை இல்லாமல் பேசிய ஜோவிகா விஜயகுமாரை, சக போட்டியாளரான விஷ்ணு விஜய் விமர்சித்த காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


 கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸின் 7வது சீசன் மிக பிரமாண்டமாக தொடங்கியது. வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடப்பு சீசனில்  பங்கேற்றனர். 


வழக்கம்போல கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முதல் வாரம் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து உடல்நலக்குறைவால் பவா செல்லதுரை வெளியேறினார். இம்முறை பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாக அந்த வீடு பிரிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் கேப்டனால் தேர்வு செய்யப்படும் 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்று, பிக்பாஸ் வீட்டில் சமையல், பாத்ரூம் கிளீனிங் உள்ளிட்ட டாஸ்குகளை செய்ய வேண்டும். 






நடுநடுவே இதிலிருந்து தப்பிக்க வித்தியாசமான டாஸ்குகளும் வைக்கப்படும். ஏற்கனவே முந்தைய 2 சீசன்கள் கொஞ்சம் டல் அடித்ததால் இம்முறை வித்தியாசமாக மாற்றி யோசிக்க வைத்தனர் நிகழ்ச்சி குழுவினர். ஆனால் போட்டி சுவாரஸ்யமாக செல்கிறதோ இல்லையோ, மக்களை கண்டெண்ட் வழியாக கவர வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தனித் தனியாக ஹீரோ, வில்லன் ரேஞ்சுக்கு சண்டையிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார், வந்த நாளில் இருந்து தினமும் ஒரு பிரச்சினை நடக்க காரணமாகி விடுகிறார். 


முதல் வாரம் அவரது படிப்பை பற்றி பேசிய விசித்ராவை கோபத்தில் மரியாதை இல்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனக்கென்று ஒரு லிமிட் உண்டு என்றும், அதை தாண்டி பேசுபவர்களை நோஸ்கட் கொடுப்பதிலும் ஜோவிகா கில்லாடியாக இருக்கிறார். இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்களில் மிக குறைவான வயதுக்காரரான ஜோவிகா, சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் அழைப்பதை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர். 


இப்படியான நிலையில்  இந்த வாரம் சக போட்டியாளரான பிரதீப், விஷ்ணு விஜய் உள்ளிட்டோரை அவர் வாடா, போடா என அழைத்திருந்தார். இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் ஜோவிகா - விஷ்ணு விஜய் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. அதில் பேசும் ஜோவிகா, “தன்னை சுயபுத்தி இல்லாதவர் என சொல்கிறார்கள். அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமும் ஏற்புடையதாக இல்லை” என தெரிவிக்கிறார். உடனே பேசும் விஷ்ணு விஜய், “உனக்கு எப்படி பேசவே தெரியாது. ஜாக்கி தான் போட தெரியும். நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா?.. வாடா, போடான்னு சொல்றீயே.. உனக்கு ஒரு லிமிட் இருக்கும் போது, மத்தவங்ககிட்ட அது இல்லையா.. ஒருவாட்டி தான் சொல்வாங்க. நீ இவன், அவன்னு சொல்றீயே.. நான் உன்னை என்ன வாடி, போடின்னு சொல்றனா.. உனக்கு எல்லாருமே இங்க எளக்காரமா தான் இருக்குது.. ஒருத்தர்கிட்ட எப்படி பேச வேண்டும் என தெரிந்து கொண்டு பேசு.. இடம் பொருள் ஏவல் தெரிஞ்சு பேசு.. எல்லோரும் உங்க வீட்டுல வேலை செய்யல” என உண்டு இல்லை என கண்டிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.