பிக்பாஸ்  நிகழ்ச்சியில்  முதல் நாமினேஷன் பிராஸசஸ் தொடங்கியுள்ள நிலையில் இனிமேல் தான் போட்டியாளர்களின் உண்மையாக முகம் தெரிய வரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


களைக்கட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது.இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 






எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் முதல் வாரம் என்பதால் பெரிதாக எந்த கறாரும் காட்டாமல் நிகழ்ச்சியை கமல் கொண்டு சென்றார். அவர் ஜிபி முத்துவை கலாய்த்த காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 


முதல் நாமினேஷன் 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் தாண்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது நாமினேஷன் பிராஸசஸ் தான். ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். கூட இருந்தே யார் கோர்த்து விட போகிறார்கள் என போட்டியாளர்களின் இன்னொரு முகமும் இந்த நாமினேஷன் ரவுண்டில் வெளிப்படும். அந்த வகையில் தற்போது முதல் வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆயிஷா விக்ரமன் மற்றும் ஷிவினை சொல்கிறார். ராபர்ட் மாஸ்டரோ எதுக்கெடுத்தாலும் கத்தி கத்தி சாதிப்பதாக ஆயிஷா பெயரை கூறுகிறார். இதேபோல் தினேஷ் சாந்தி பெயரையும்,ஜிபி முத்து குயின்ஸி பெயரையும் தெரிவிக்கிறார்கள். 


அதேசமயம் குயின்ஸி ரச்சிதா பெயரை சொல்லி அவருக்குன்னு இன்னொரு முகம் இருக்கு. அது இன்னும் காட்டல என நினைப்பதாக தெரிவிக்கிறார். இதன்மூலம் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.